Skip to main content

லஞ்சம் கேட்டதால் விவசாயி தீக்குளிப்பு; தி.மலையில் பரபரப்பு

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
 Farmer tried to set himself on fire after asking for bribe; There is excitement in T. Malai

தனது நிலத்திற்கு சிட்டா மற்றும் அடங்கல் கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதால் விவசாயி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஊதிரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் என்பவர் தனது நிலத்துக்கான சிட்டா மற்றும் அடங்கல் கேட்டு மனு கொடுத்துள்ளார்.

ஊதிரம்பூண்டி கிராமத்தில் விவசாயி ராமகிருஷ்ணனுக்கு நான்கு ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. நான்கு ஏக்கரில் ஆட்டுப் பண்ணை வைத்து விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக தேவனாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் காந்தி என்பவரிடம் சிட்டா மற்றும் அடங்கல் கேட்டு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிராம நிர்வாக அலுவலர் கிடப்பில் போட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று மீண்டும் விவசாயி ராமகிருஷ்ணன் கிராம நிர்வாக அலுவலர் காந்தியை நேரில் சந்தித்து தனது நிலத்திற்கு சிட்டா மற்றும் அடங்கல் கொடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார். அதெல்லாம் கொடுக்க முடியாது, பணம் தந்தால் தான் வேலை நடக்கும் என சொன்னதோடு ஒருமையில் பேசியதால் மனமுடைந்த விவசாயி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

அவரின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து உடலில் தீப்பற்றி எரிந்ததை கண்டு தீயை அணைத்து உடனடியாக வாழையிலை, வாழை சாறு உள்ளிட்டவற்றை உடல் மீது ஊற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உடனடியாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

விவசாயி ராமகிருஷ்ணன் சிட்டா மற்றும் அடங்கல் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் காந்தி கொடுக்க மறுத்ததால் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பவம் குறித்து கலசப்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்சம் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் விவசாய நிலத்திற்கு சிட்டா மற்றும் அடங்கல் கொடுக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Female revenue inspector arrested for taking bribe

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் பெண் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பாரதி. இவர் மேல் நாச்சி பட்டு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்ற முதியவரிடம் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக 1000 ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், விவசாயி திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் கலந்த பணத்தை பழனிசாமியிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து நேற்று பழனிசாமி பெண் வருவாய் ஆய்வாளர் பாரதியிடம் கொடுத்திருக்கிறார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை போலீசார், பாரதியை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட பெண் வருவாய் ஆய்வாளரிடம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து   விசாரணை மேற்கொண்டனர்.

Next Story

ரூ.2000 லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய அதிகாரி

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Electricity Board official arrested for bribe Rs.2000 lakh

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா கவரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் தங்கராசு(45). இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் பூர்வீக நிலத்தினை இவரும் இவரது அண்ணனும் சரி பாதியாக பிரித்து அதில் விவசாயம் செய்து வருகின்றனர். இவரது அண்ணன் கணேசனுக்கு பிரிக்கப்பட்ட பங்கில் விவசாயக் கேணி உள்ளது. 

தங்கராசுக்கு பிரிக்கப்பட்ட நிலத்தில் ஆழ்துளை கிணறு உள்ளது. ஆழ்துளை கிணற்றுக்கும் கேணிக்கும் சேர்த்து ஒரு இலவச விவசாய மின் இணைப்பு மட்டும் உள்ளது. ஒரு இலவச மின் இணைப்பு பெற்று இரண்டு இடங்களிலிருந்து தண்ணீர் எடுப்பதாக மின்வாரியத்துக்கு வந்த புகாரின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் விசாரணை செய்து தங்கராசுவுக்கு அபராதம் விதித்து வசூல் செய்துள்ளனர். மேலும் தங்கராசு தனியாக பயன்படுத்தி வந்த மின் இணைப்பினைக் கடந்த 7.6.2024 அன்று வணிக பயன்பாட்டுக்கும் மாற்றி உள்ளனர்.

பின்பு கடந்த 25 ஆம் தேதி தங்கராசுவின் தொலைபேசிக்கு AD பேசுகிறேன் என்று சொல்லி உன் மீது சுமதி என்பவர் புகார் கொடுத்துள்ளார். நீ தொட்டியம் ஆபீசுக்கு வந்து என்னை பார் என்று கூறியுள்ளார்.  அதன் பேரில் மறுநாள்(26. 6 .2024) மதியம் 3 மணியளவில் தொட்டியத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் சென்று  அங்கிருந்த ஏ.டி திருமாறன் என்பவரை சந்தித்துள்ளார். அப்போது ஏ.டி திருமாறன் உனக்கு டேரிஃப் சேஞ்ச் பண்ணிக் கொடுத்ததற்கும் நீ எனக்கு எதுவும் தரல, இப்ப சுமதி என்பவர் உன் மேல புகார் கொடுத்து இருக்காங்க. அந்தப் புகார உனக்கு சாதகமாக எழுதி அனுப்ப வேண்டும். அதனால எனக்கு 2000 ரூபாய் கொடுத்துவிடு என்று கேட்டுள்ளார்.  

அதற்கு தங்கராசு பணம் தயார் செய்து கொண்டு உங்களை வந்து பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத தங்கராசு திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்தப் புகாரின் பேரில் டி.எஸ்.பி மணிகண்டனின் ஆலோசனையின் பேரில் இன்று(2.7.2024) மதியம் சுமார் ஒன்றரை மணி அளவில் தொட்டியம் ஏடி திருமாறன் தங்கராசுவிடம் இருந்து 2000 ரூபாய் லஞ்சப் பணத்தை கேட்டுப் பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் டிஎஸ்பி மணிகண்டன் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், பிரசன்ன வெங்கடேஷ் அடங்கிய குழுவினர் ஏடி திருமாறனை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.