Skip to main content

போலி பத்திரிகையாளர்கள்! - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை 

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

Fake journalists! District Collector warning

 

“பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு உயர் அலுவலர்களைத் தெரியும் எனவும், அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறேன் என்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டும், அவர்களிடம் ஏமாற்றி பணத்தைப் பறித்துவிடுவதாகப் புகார்கள் வரப்பெற்றுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமில்லாமல், காவல்துறை மூலமாக வழக்குப் பதிவு செய்யப்படும்.

 

மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது. அத்தகைய நபர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 

அரசு அலுவலகங்களில் பணிக்கு இடையூறு அளிக்கும் வகையில் பணம் பறிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீதும், பிறரின் கோரிக்கை மனுக்களை பத்திரிகையாளர் என்ற பெயரில் சிபாரிசு செய்யும் நபர்கள் குறித்தும் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தகவல் தெரிவிக்கும்படி அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 9498042453 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவலை அனுப்பினால் அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்