Skip to main content

முதியவருக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர்... தீவிர விசாரணையில் காவல்துறையினர்! 

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

The fake doctor who treated the elderly; Police in serious investigation

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ளது விட்டலாபுரம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி என்பவரது மகன் மணிகண்டன் (44), பி.எஸ்.சி படித்துள்ளார். இவர் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உதவியாளராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் தற்போது விட்டலாபுரம் சாலையில் உள்ள தனது சொந்த வீட்டிலேயே இவர் மருத்துவர் போன்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துவந்துள்ளார்.

 

இந்த நிலையில், திண்டிவனம் அருகிலுள்ள கருணாவூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு (எ) ஆறுமுகம் (70) என்ற முதியவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரது உறவினர்கள் போலி மருத்துவர் மணிகண்டனிடம் அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்துள்ளனர். இந்த நிலையில் இரண்டாவது முறையாக நேற்று (11.07.2021) மதியம் மணிகண்டனிடம் மருத்துவம் பார்த்துவிட்டு நடந்துசென்றுள்ளார் முதியவர் ஆறுமுகம். சிறிது தூரம் சென்றவுடன் சாலை ஓரத்திலேயே ரத்த வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தவர், அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலி மருத்துவர் மணிகண்டன் தலைமறைவாகியுள்ளார். தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

 

மேலும் விசாரணையில், போலி மருத்துவர் மணிகண்டன் தவறான சிகிச்சை அளித்ததால் ஆறுமுகம் ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளதாக ஆறுமுகத்தின் உறவினர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து போலி மருத்துவர் மணிகண்டன் மருத்துவம் பார்த்த அறையைப் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர். இதுகுறித்த சுகாதாரத்துறையினரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்து போலி மருத்துவர் மணிகண்டனை தேடிவருகின்றனர். மணிகண்டன் போலியாக மருத்துவம் பார்த்ததாக ஏற்கனவே இரண்டுமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். உண்மையான மருத்துவர்கள் கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு சிகிச்சை அளித்தால் இதுபோன்ற போலி மருத்துவர்கள் அதிகரிக்க மாட்டார்கள். போலி மருத்துவர்கள் அதிகரிப்பதற்கு காரணம், முறையாக மருத்துவம் படித்த மருத்துவர்கள்தான்; அவர்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று மக்களுக்கு சிகிச்சை அளிக்க தயங்குவதுதான். அரசு மருத்துவர்கள் கிராமப்புற சுகாதார நிலையங்களுக்குப் பணிமாறுதல் பெற்றுச் சென்றாலும், சென்ற சில மாதங்களிலேயே மீண்டும் நகரப் பகுதிகளுக்குப் பணிமாறுதல் பெற்று திரும்பிவிடுகிறார்கள். இப்படி அரசு மருத்துவர்கள் கிராமப்புற மக்களைப் புறக்கணிப்பதால்தான் போலி மருத்துவர்கள் அதிகரிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.