Skip to main content

வேலையை விட்டு நீக்கியதை கண்டித்து தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் போராட்டம்!

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

காஞ்சிபுரம்  - நீர்வள்ளூர் -  எட்டு வருடமாக பணியிலிருந்த 22 தொழிலாளர்களை பணி நீக்கியதை கண்டித்து நீர்வள்ளூர் எஸ்எச்சி எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை முன்பு வாயிற்கதவை அடைத்து குடும்பத்துடன் முற்றுகை போராட்டம்.
 

 

 

காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம். இம்மாவட்டத்தில்  தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் மூன்று சிப்காட் தொழிற் பூங்கா உள்ளது. காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் நீர்வள்ளூர் ஆரியம்பாக்கம் கிராமத்தில் எஸ்.எச்.சி. என்ற எலக்ட்ரானிக் தொழிற் நிறுவனம் இயங்கி வருகின்றது . இதில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனம் சாம்சங் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயாரித்து அளித்து வருகிறது .
 

இந்நிலையில் இதில் கடந்த எட்டு வருடங்களாக பணிபுரிந்து வந்த 22 தொழிலாளர்களை திடீரென்று இந்த நிறுவனம் பணி நீக்கம் செய்தது .இதனால் அவர்கள் தங்களது வாழ்வாதாரம் தடைபடவே செய்வதறியாமல் அதிர்ச்சியுற்றனர். இந்த நிலையில் இன்று பாதிக்கபட்ட 22 தொழிலாளர்களும் தமது குடும்பத்தினருடன் இந்த நிறுவன வாயிலை அடைத்து முற்றுகையிட்டு தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனவும், வேலை வாய்ப்பில் தமது கிராமத்தினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் ஆட்டுபுத்தூர் தை கோபி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். 
 

 

 

இதனால்  அந்த நிறுவனத்திற்குள் பணிபுரியும் நூற்றுக்கணக்கானோர் யாரும் உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை உருவானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இந்நிலையில் காஞ்சிபுரம் தாலுக்கா மற்றும் சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் நிறுவன நிர்வாகிகளிடமும், தொழிலாளர் துணை ஆய்வாளரிடம் பேசி இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் ஆய்வாளர் வெற்றி செல்வன் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து தொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தினரும் கலைந்து சென்றனர்.
 

இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் பு.பெ.கலைவடிவன், மாநில வழக்கறிஞர் அணி நிர்வாகி தாடி .கார்த்திக், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் டேவிட், மாவட்ட துணை செயலாளர் திருமாதாசன், ஊர் மக்கள் சார்பாக கந்தன், காண்டீபன், சாந்தி, ஈஸ்வரி, மேகலா உட்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” - தொல். திருமாவளவன் எம்.பி.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை  விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார். மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.

‘காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை இஸ்லாமியர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது’ என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். ‘உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?. பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு,  நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல் காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது’என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.