Skip to main content

தொடர்மழை காரணமாக பூக்கள் ஏற்றுமதி பாதிப்பு!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

Exports of flowers affected due to continuous rains!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டுள்ள 'செண்டு மல்லிகை' பூவிற்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 

கரோனா ஊரடங்கு தளர்வு முதல் பூக்கள் விற்பனை சற்று உயர தொடங்கியுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பூக்களுக்கு கிராக்கி ஏற்படுவது போல் புரட்டாசி மாதத்தில் செண்டுமல்லி பூவிற்கு நல்ல கிராக்கி ஏற்படும். இதனால், கடந்த காலங்களில் செண்டுமல்லி பூ ஒரு கிலோ ரூபாய் 80 முதல் ரூபாய் 100 வரை விற்பனையானது. 

 

அந்த எதிர்பார்ப்பில் தற்போது விவசாயிகள் செண்டுமல்லி பூக்களைப் பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டு வர தொடங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் எதிர்பார்ப்புக்கு நேர் மாறாக, ஒரு கிலோ செண்டுமல்லி ரூபாய் 15 முதல் ரூபாய் 20 வரை மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து நிலக்கோட்டை பூக்கள் ஏற்றுமதியாளர் முருகேசன் கூறும்போது, “கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு அதிக அளவில் செண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் செண்டு மல்லி பூ வரத்து அதிகமாக இருப்பதாலும், கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் தொடர்மழை பெய்து வருவதாலும் ஏற்றுமதி குறைந்துபோனது. இதனால், விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது” என்று கூறினார். செண்டுமல்லி பூவிற்கு எதிர்பார்த்த நேரத்தில் விலை கிடைக்காததால் நிலக்கோட்டை விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இவ்வளவும் குப்பைக்கு போனால் எங்கள் வாழ்வு எப்படி மணக்கும்' -வேதனையில் பூ விவசாயிகள்

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

How will our life smell if so much goes to waste - Flower farmers in agony

 

'கிலோ 5 ரூபாய்க்கு விற்றாலும் தினமும் 5 டன் பூ குப்பைக்கு போனால் எப்படி விவசாயிகள் வாழ்க்கையில் நறுமணம் வீசும்?' இப்படி ஒரு கேள்வியைத் தான் பூ விவசாயிகள் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள் பூ சாகுபடி செய்த விவசாயிகள்.

 

மதுரை, திருச்சி பூ சந்தைக்கு அடுத்தது புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பூ சந்தை. பூ விற்பனை அதிகம்.  அதாவது, கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வரை கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கனகாம்பரம் பூ மட்டுமே அதிகமாக விவசாயம் செய்த விவசாயிகள் தங்கள் தோட்டத்திலேயே உள்ளூர் வியாபாரிகளிடம் விற்றனர். அதன் பிறகு மல்லிகை, முல்லை, காட்டுமல்லி, ரோஜா, சம்பங்கி, செண்டி என அனைத்து வகை பூக்களையும் பயிரிட்டனர். தோட்டத்தில் பறிக்கும் பூக்களை கீரமங்கலத்தில் உள்ள பூ கமிசன் கடைகள் மூலம் விற்பனைக்கு வர புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் என பல மாவட்ட வியாபாரிகளும் வந்து பூக்களை வாங்கிச் சென்றனர். ஒரு நாளைக்கு சுமார் 10 டன் பூக்கள் விற்பனை நடந்து வருகிறது. ஆனால் பூக்களுக்கு நிரந்தரமான விலை இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு விலை தான். பண்டிகை, சுப முகூர்த்த நாட்களில் ஆயிரங்களில் விலை போகும் பூக்கள் மற்ற நாட்களில் கிலோ ரூ.5, 10 க்கும் 100, 200 க்கும் விற்பனை ஆகும்.

 

அதிலும் ஆடி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் சொல்லவே வேண்டாம் விலை குறைவுதான். கடந்த சில மாதங்களாக சம்பங்கி பூக்கள் கிலோ ரூ,5, 10, 20 க்கு விற்பனை செய்யும்போது கூட ஒரு நாளைக்கு 5 டன் வரை பூக்கள் விற்பனை ஆகாமல் தேங்கி குப்பைக்கு போகிறது. இதனைப் பார்த்து வேதனைப்படாத விவசாயிகளே இல்லை.

 

இது குறித்து பூ விவசாயிகள் கூறும் போது, 'தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் அத்தனை வகை பூக்களும் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் பருவ காலத்தை தவிர மற்ற நாட்களில் விற்பனை மந்தமாக இருக்கும். அந்த நேரங்களில் உற்பத்தி செலவு, பூ பறிக்கும் கூலிக்கு கூட விற்பனை ஆகாது. சம்பங்கி பூ பறிக்க கிலோவுக்கு ரூ.20 கொடுக்கனும் உற்பத்தி செலவு தனி ஆனால் கமிசன் கடையில் விற்பனையாவது கிலோ ரூ.10. இதில் விவசாயிகளுக்கு பறிக்கும் கூலி கூட நட்டம். அதேபோல பூ தேவை குறைவாக இருப்பதால் 10 ரூபாய்க்கு வாங்கிய பூக்களை விற்கமுடியாமல் கமிசன் கடைகாரங்களுக்கும் நட்டம். இப்படியே தொடர்ந்து நட்டப்படுவதே வழக்கமாகிப் போச்சு. தினமும் 3 முதல் 5 டன் வரை பூக்கள் குப்பைக்குத் தான் போகிறது.

 

ஒரு நறுமண தொழிற்சாலை இருந்தால் குறைந்த விலை விற்றாலும் வீணாகி குப்பைக்கு போகாமல் தொழிற்சாலைக்காவது போகும். இப்படி டன் கணக்கில் பூக்கள் குப்பைக்கு போவதைப் பார்த்து விவசாயிகளின் வியர்வையும் உழைப்பும் இப்படி போகுதேன்னு கண்கலங்கிட்டு கடந்து போகத்தான் முடிகிறது' என்கின்றனர்.

 

 

Next Story

ஆயுதபூஜை எதிரொலி; பூக்கள் விலை கடும் உயர்வு

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

Ayudapuja Echo; The price of flowers has skyrocketed

 

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை காரணமாக மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது.

 

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வடைந்துள்ளது. குமரி தோவாளை பகுதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு மலர் சந்தை நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழ்நாட்டின் ராயக்கோட்டை, மதுரை, ஓசூர், திண்டுக்கல் என பல்வேறு வெளியூர் பகுதிகளில் இருந்தும், ஆரல்வாய்மொழி, குமாரபுரம், தோவாளை உள்ளிட்ட உள்ளூர்ப் பகுதிகளில் இருந்தும் சுமார் 200 டன் பூக்கள் இந்த சிறப்பு மலர் சந்தைக்கு வந்துள்ளது.

 

ஒரு கிலோ பிச்சிப்பூ 800 ரூபாயில் இருந்து 1100 ரூபாய்க்கும், மல்லிகைப்பூ கிலோ 1,000 ரூபாயிலிருந்து 1500 ரூபாய்க்கும், ரோஜா பூ ரூபாய் 250 லிருந்து 300 ரூபாய்க்கும், அரளிப்பூ 400 ரூபாயில் இருந்து 500 ரூபாய்க்கும், சம்பங்கி 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் பூக்களை வாங்கிச் சென்று வருகின்றனர்.