Skip to main content

வருகிறது ஸ்மார்ட் லைசன்ஸ்!

Published on 06/09/2018 | Edited on 06/09/2018
Smart License


இன்றைய உலகம் ஸ்மார்ட் உலகம். அலைபேசி முதல் அடுப்பு வரை அனைத்தும் ஸ்மார்ட்டான பொருட்களையே பயன்படுத்த ஆயத்தமாகி வருகிறது இளைய தலைமுறை. அரசாங்கம் மட்டும் அப்படியே இருந்தால் எப்படி? தன் பங்குக்கு அரசும் ஒவ்வொரு துறையாக கணினிமயமாக்கி வருகிறது.

அதன் ஒரு கட்டமாக ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புக், இன்சூரன்ஸ், ரோடு டாக்ஸ் உள்ளிட்ட விவரங்களை தனித்தனி ஆவணமாக வைத்துக்கொண்டிருக்காமல் ஒரே ஆவணமாக- ஸ்மார்ட் கார்டு வடிவில் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அளவில் ஒரு ஸ்மார்ட் கார்டு, அதில் ஒரு கணினி சிப். மொத்த விவரங்களும் அதில் இடம்பெறும்படி பார்த்துக்கொள்வது என திட்டமிடப்பட்டுவருகிறது. இந்த ஸ்மார்ட் கார்டுகளை தயாரிக்கும் பணியை, டெண்டர் மூலம் தேர்ந்தெடுக்கும் தனியார் நிறுவனங்களிடம் அளிக்க முடிவுசெய்யப்பட்டிருக்கிறது என்கிறார். போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி.
 

Smart License


இந்த ஸ்மார்ட் கார்டுக்கென கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாதென தற்சமயம் திட்டமிடப்பட்டிருக்கிறது. புகைப்படம் கொடுத்த அரை மணி நேரத்தில் இந்த ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இதில் வாகன ஓட்டிகளுக்கு எப்படி வசதியிருக்கிறதோ…. அதேபோல போக்குவரத்துக் காவலர்களுக்கும் நிறைய வசதியிருக்கிறது.

இந்த அட்டையில் வாகனத்தின் முந்தைய உரிமையாளர், காப்பீட்டு விவரங்கள், முன்பு போக்குவரத்து விதிகளை மீறியிருந்தால் அதுகுறித்த விவரங்கள், பெயர், முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் இடம்பெறும். காவலர்களுக்கு இந்த ஸ்மார்ட் கார்டை வாசித்துச் சொல்லும் ஸ்மார்ட் கார்டு ஸ்கேனர்கள் வழங்கப்படும். அட்டையை இதில் நுழைத்தவுடன் ஓட்டுநர் உரிமம் ரத்தாகியிருக்கிறதா, முன்பு ஏதும் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டிருக்கிறதா என்பதைக் காட்டிவிடும். அடிக்கடி விதிகளை மீறும், விபத்தை ஏற்படுத்தும் நபர்களை போக்குவரத்து விதிகளை தொடர்ந்து மீறுபவர் என பட்டியலிட்டு கடுமையான தண்டனை வழங்க பரிந்துரைக்கலாம்.

எல்லாம் சரி, போக்குவரத்து உரிமம், காப்பீடு என அனைத்தும் வைத்திருந்தாலும் கைநீட்டும் போலீஸைக் காட்டிக்கொடுக்க ஸ்மார்ட் லைசென்ஸில் ஏதாவது வழிவகை செய்தால் நல்லாயிருக்கும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உரிமம் இன்றி செயல்பட்ட 12 மாம்பழ கிடங்குகளுக்கு அறிவிக்கை! உணவுப்பாதுகாப்புத்துறை அதிரடி!!

Published on 04/06/2020 | Edited on 04/06/2020

 

mango


உரிமமின்றி செயல்பட்டு வந்த 12 மாம்பழ கிடங்குகளுக்கு உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குற்றச்சாட்டு அறிவிக்கை அளித்துள்ளனர். 
 


சேலம் மாநகரில் கார்பைடு கல் மூலம் மாங்காய்களை செயற்கையாகப் பழுக்க வைப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறைக்குப் புகார்கள் சென்றன. இதையடுத்து, அத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் சேலம் சின்னக்கடை வீதி, அரிசிபாளையம் சாலை, சத்திரம் ஆகிய இடங்களில் மொத்தமாகவும், சில்லரையாகவும் மாம்பழங்களை விற்பனை செய்து வரும் 21 கிடங்குகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) ஆய்வு செய்தனர். 

மாம்பழ வியாபாரிகள் பலர், உணவுப்பாதுகாப்புத்துறை உரிமம் பெறாமலேயே வணிகம் செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. சில கிடங்குகளில் கார்பைடு கற்கள் மூலம் மாங்காய்கள் பழுக்க வைக்கப்படுவதும் தெரிய வந்தது. இதையடுத்து உரிமமின்றி செயல்பட்டு வந்த 12 மாம்பழ கிடங்கு உரிமையாளர்களுக்கு, உணவுப்பாதுகாப்பு சட்டம் பிரிவு 31 (1)இன் கீழ், அறிவிக்கை வழங்கப்பட்டது. 
 

 


மேலும், மாங்காய்களை செயற்கையாகப் பழுக்க வைப்பதற்காகப் பயன்படுத்திய ரசாயனக் கலவைகள், தெளிப்பான்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு உணவுப்பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006இன் படி, நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''சேலம் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து வகையான உணவுப்பொருள் விற்பனை கடைகளும் உணவுப்பாதுகாப்புத்துறையின் உரிமம் பெறுவது கட்டாயம். 
 

http://onelink.to/nknapp


தற்போது மாம்பழ வியாபாரிகள் மீது மின்னஞ்சல் மூலமாக வந்த புகாரின்பேரில் கிடங்குகளில் ஆய்வு செய்யப்பட்டு, உரிமமின்றி செயல்பட்ட 12 கிடங்கு உரிமையாளர்களுக்கு குற்றச்சாட்டு அறிவிக்கை வழங்கப்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,'' என்றனர். 

 

 

Next Story

துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு எம்.பி. ஒபிஆர்  மனு!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மூத்த மகன் ரவீந்திரநாத் குமார் அரசியலில் குதித்ததை தொடர்ந்து கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 78 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள 38 தொகுதிகளில் அதிமுக கூட்டணி போட்டியிடும் கூட எம்பி ரவீந்திரநாத் குமார் தவிர மற்ற அனைவரும் படுதோல்வி அடைந்தனர்.

இப்படி அதிமுகவில் ஒரே ஒரு எம்பி ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றதின் மூலம் பாராளுமன்ற குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர் அது கடைசி நேரத்தில் கைநழுவி போய் விட்டது.

 

 MP OPR asking for a gun license petition!


அப்படி இருந்தும் கூட தொடர்ந்து மோடிக்கு ஆதரவாக அவ்வப்போது பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார். அதோடு முத்தலாக் சட்டத்திற்கு ஆதரவாகவும், குடி உரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். இதனால் முஸ்லீம் அமைப்புகள் உள்பட எதிர்க் கட்சிகள் மத்தியில் ஒருஅதிருப்தி  அலையும் ஒபிஆர் மேல் பரவலாக வீசி வருகிறது. இந்த நிலையில்தான் கடந்த மாதம் கம்பத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு சென்ற ஒபிஆர் மீது முஸ்லீம் அமைப்பினர் சிலர் அவர் காரை தாக்கவும் முயன்றனர். இதனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தொகுதிக்கு செல்லும்போது எல்லாம் எம்.பி.ஒபிஆர் பலத்த பாதுகாப்புடன் சென்று வருகிறார்.

ஆனால் அரசியல்வாதிகளும், விஐபிகளும் பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் வாங்கி துப்பாக்கி வைத்துக் கொள்வது வழக்கம் அதுபோல் எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் குமாரும் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் மனு கொடுத்திருக்கிறார். அதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பல்லவியும் எம்.பி. ஒபிஆர் மனுவை ஆய்வு செய்து வருகிறார். அதன் மூலம் கூடிய விரைவில் துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்ஸ்சும் எம்.பி.ஓபிஆர்க்கு கிடைக்கபோகிறது.