Skip to main content

காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள்!

Published on 21/09/2018 | Edited on 21/09/2018

 

 திமுக தலைவர் ஸ்டாலின் காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.  இது குறித்த அவரது  அறிக்கை:

“காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடக்கவில்லை” என்று, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை மின்துறை அமைச்சர் திரு தங்கமணி அவர்கள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, பேட்டி என்ற பெயரில் அளித்திருப்பதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு ஊழல் புகாரை வெளியிடும் போது ஆதாரங்களை மறைத்து பதில் கொடுப்பது அமைச்சருக்கு கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தமட்டில் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டு தான் அறிக்கை விடுவேன் என்பது கூடத்தெரியாமல் - அல்லது புரியாமல், அமைச்சர் காற்றாலை தொடர்பான இமாலய ஊழலை மறைக்க முயற்சிக்கிறார்.

ஆதாரம் -1

 

எ

 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள திருநெல்வேலி மண்டல ஆடிட் பிராஞ்சின் உதவி ஆடிட் அதிகாரி தனது அறிக்கையில், “உற்பத்தியே ஆகாத காற்றாலையின் பெயரில் 9 கோடியே 17 லட்சத்து 3 ஆயிரத்து 379 ரூபாய் மதிப்புள்ள காற்றாலை மின்சாரம் பெறப்பட்டதாக போலி ஒதுக்கீடு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

 

ஆகவே, இந்த 9 கோடி ரூபாயை மின்வாரியம் கொடுக்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் 22 சதவீத வட்டியுடன் உடனடியாக வசூல் செய்ய வேண்டும்” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ள வரிகளை ஆதாரத்துடன் சொல்வது என்றால், “Bogus Energy allotment made without generation” என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் அந்த ஆடிட் அதிகாரி அறிக்கை கொடுத்த பிறகும், ஊழல் நடக்கவில்லை என்று மின்துறை அமைச்சர் மறைக்க வீணே முயற்சி செய்வதில்தான், ஊழலின் மொத்த உருவமுமே மறைந்திருக்கிறது. மின் வாரியத்திற்கு ஏதும் பிரச்சினையில்லை என்றால், 9 கோடி ரூபாயை வசூல் செய்யுங்கள் என்று ஆடிட் அதிகாரி கூறியிருப்பது ஏன்?

ஆதாரம் -2

 

es

 

அமைச்சர் தன் பேட்டியில் “இது தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரம்” என்று மூடி மறைக்கிறார். அப்படியென்றால், மின்பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி வட்டார மேற்பார்வைப் பொறியாளர் கடிதம் எழுத வேண்டிய அவசியம் ஏன் வந்தது? அதுவும் உற்பத்தி ஆகாத காற்றாலையில் மின்சாரம் பெறப்பட்டதாக ஏன் கடிதம் எழுதப்பட்டது? அந்த மேற்பார்வைப் பொறியாளர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? அதேபோல், தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரத்திற்கு அமைச்சர் தன் பேட்டியில் கூறியிருப்பது போல், 11 கோடி ரூபாய் பணம் செலுத்தக்கோரி மின் பகிர்மானக்கழகம் இப்போது டிமான்ட் நோட்டீஸ் அனுப்பியது ஏன்?

ஆகவே, காற்றாலை மின்சாரத்தில் “போலி ஒதுக்கீடு கணக்கு” காட்டி ஊழல் நடந்திருப்பது ஆதாரபூர்வமானது. இதோ ஆதாரத்தை வெளியிட்டு இருக்கிறேன். ஊழல் நடக்கவில்லை என்று இப்போதும் அமைச்சர் கூறுவாறேயானால், மின்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, காற்றாலை மின்சாரத்தில் “போலி ஒதுக்கீடு” கணக்குக் காட்டி நடைபெற்றுள்ள ஊழல் குறித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடத் தயாரா?’’

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !

Next Story

“திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” - ‘அதிமுக’ தங்கமணி ஆவேசம்!

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
DMK regime should also be put to an end says Thangamani

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், துறையூர் நகரக் கழக செயலாளர் அமைதி பாலு ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் திருச்சி, துறையூர், பாலக்கரை பகுதியில், மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.  கட்சி நிறுவனத் தலைவர், தமிழக முன்னாள் முதலமைச்சர், எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில், அமைப்பு செயலாளர்  நாமக்கல் மாவட்ட செயலாளர்,  முன்னாள் அமைச்சர் தங்கமணி, திரைப்பட இயக்குநர் பவித்ரன், தஞ்சை மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி,   எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த 11 ஆண்டு காலம் தமிழகத்தின் பொற்காலம். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா, எடப்பாடி ஆகியோர் கொண்டு வந்த  தாலிக்குத் தங்கம், பெண்களுக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய மடிக்கணினி போன்ற  மக்களுக்கு பயன்படும் முத்தான திட்டங்களை திமுக அரசு தற்போது நிறுத்திவிட்டது.   மேலும்,  நம் எடப்பாடி பழனிசாமி அரசு பள்ளியில் பயின்றதால், அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பு படிப்பதற்காக 7.5% இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தார்.   இதனால் ஆண்டு தோறும் ஏழை மாணவ, மாணவிகள் சுமார் 500 நபர்கள் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர்.

திமுக, வருகின்ற, நாடாளுமன்றத் தேர்தலை  மனதில் வைத்துக் கொண்டு தான், கடந்த 27 மாதங்களுக்குப் பிறகு குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.   தேர்தல் வாக்குறுதியின் போது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை ஆயிரம் வழங்கப்படும் என கூறிவிட்டு, தற்போது 2 கோடியே 30 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருக்கும் நிலையில், அதில் ஒரு கோடியே 10 லட்ச குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் உரிமைத்தொகை வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு  ரூபாய்  ஆயிரம்  30 சதவீத குடும்ப அட்டைகளுக்கு வழங்கவில்லை.

திமுக வீர வசனமாக தேர்தல் அறிக்கை கொடுத்துவிட்டு இன்று ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலத்திற்கு உள்ளாகவே மின் கட்டணத்தை 52% உயர்த்தி விட்டனர். வீட்டு வரி 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் ஏற்றிவிட்டனர். கடைகளுக்கு 150 சதவீதம் வரை வரி விகிதம் உயர்ந்து உள்ளது. குடிநீர் முதல் குப்பை வரி வரை உயர்ந்து இருக்கிறது.   இதனால் மக்கள் அன்றாடம் கஷ்டப்படுகின்றனர். இந்த திமுக ஆட்சிக்கு வாக்களித்துவிட்டு தினந்தோறும் ஒவ்வொரு விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கிறது. திமுக ஆயிரம் ரூபாய் உங்களுக்கு கொடுப்பதாகச் சொன்னால் உங்களுக்கு கூடுதலாக 500 ரூபாய் செலவாகிறது என்று அர்த்தம். இதெல்லாம் சிந்தித்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்  ஒருபுறம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். மறுபுறம் வேலை வாய்ப்பு கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு மூன்று லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று கூறிவிட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் மொத்தமே மூன்று லட்சம் பேருக்கு கூட வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை எப்படி எல்லாம் திமுக பொய் பேசி தங்களது ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள் என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.   இந்த ஆட்சியில் கலைஞர் போலவே அவரது மகனும் பொய்யான வாக்குறுதி கொடுப்பதிலே மிகவும் கெட்டிக்காரராக இருக்கிறார். அதில் ஏமாந்து தான் இந்த முறை மக்கள் வாக்களித்து விட்டு மீண்டும் எப்போது தேர்தல் வரும் அதிமுக ஆட்சி எப்போது அமையும் எடப்பாடி எப்போது முதலமைச்சராக வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் தான் பாதுகாவலர் என்று மார்தட்டி சொல்லிக்கொண்டு இருக்கும் திமுக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர் வீட்டில் வேலை செய்த ஒரு பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த பெண் அவரை நயவஞ்சகமாக அழைத்து வந்து மருத்துவராக படிக்க வைப்போம் என்று கூறி அந்த பெண்ணை அவரது மகன் மற்றும் மருமகள் கொடுமைப்படுத்தியுள்ளனர்.   அந்தப் பெண்ணிற்காக எடப்பாடி போராட்டம் அறிவித்த பிறகு இப்பொழுது தான் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் காலை ஐந்து மணிக்கு வாசலில் கோலம் போடச் சென்றால் கழுத்தில் அணிந்திருக்கும் செயினை பறிக்கும் கூட்டம் இருக்கிறது. அந்த அளவுக்கு சட்டம் சந்தி சிரிக்கிறது.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்ச ரூபாய், பட்டாசு ஆலைகள் வெடி விபத்தில் இறந்தால் மூன்று லட்ச ரூபாய் என்ற வினோதமான திட்டத்தை இந்தியாவில் எங்கேயுமே இல்லாத அளவுக்கு தமிழகத்தில் இருக்கிறது.   இப்படி பொய்யான ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி மலர வேண்டும். ஏனென்றால் 23 நாட்கள் காவேரி குழுவிற்காக நாடாளுமன்றத்தை முடக்கி தமிழகத்தில் உரிமையை பெற்று தந்தவர் எடப்பாடி” எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, அண்ணாவி, பூனாட்சி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திரா காந்தி, பரமேஸ்வரி முருகன், செல்வராஜ், சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், புறநகர் வடக்கு மாவட்ட கழக மாணவரணி செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.