Skip to main content

அடியோடு சாய்ந்த வாழைகள்... வேதனையில் விவசாயிகள்...

Published on 21/07/2020 | Edited on 21/07/2020

 

 

வாழ்வாதாரம் என்பது உழைப்பின் மூலம் நடக்கிற உற்பத்தியை பொறுத்து தான். அப்படி உற்பத்தி செய்யப்படும் பொருள் விற்பனையான பிறகு அதுவே உழைப்புக்கு கிடைக்கிற ஊதியமாக இருக்கும். அந்த ஊதியம் தான் உழைப்பாளி குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக விளங்கும். ஆனால் இப்போதெல்லாம் எல்லா தொழில்களிலும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்பது எல்லோரும் அறிந்ததே.

 

அதுவும் இந்த கரோனா காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது. அதற்கு காரணம் ஊரடங்கு, போக்குவரத்து நிறுத்தம், தொழிற்சாலைகள் உள்பட பலவும் மூடப்பட்டதுதான், வறுமை, கடன் சுமை, வைரஸ் தொற்று நோய் பயம் என மக்கள் இப்போது துன்பத்துடன் தான் நாட்களை நகர்த்துகிறார்கள். இதில் விவசாயிகளின் நிலை மிகவும் கடினம். இந்த கொடிய காலத்திலும் விளைபொருட்களுக்கான உரிய விலை கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். இந்த நிலையில் இயற்கை சீற்றமும் கொடும் துன்பத்தை கொடுத்துள்ளது வாழை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு என்பது தான் இந்த வேதனையான செய்தி.

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான தூக்கநாயக்கன்பாளையம், மொடச்சூர், வெள்ளாங்கோவில், சத்தியமங்கலம், கவுந்தப்பாடி என பல ஊர்களில்  20 ந் தேதி திங்கள்கிழமை மாலை முதல் இரவு 11 மணிவரை அந்தப் பகுதிகளில் கன மழையும் சூறைக்காற்றும் வீசியது. பலத்த மழையோடு வீசிய சூறைக்காற்று பல இடங்களில் மரங்களை கூட கீழே தள்ளியது. 

 

அலிங்கியம், குருமந்தூர், ஆண்டவர் மலை, பூதிமடைபுதூர், கோட்டுப் புள்ளாபாளையம் ஆகிய விவசாய நிலங்களில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பல விவசாய குடும்பங்கள் வாழை மரம் சாகுபடி செய்கிறார்கள். அந்த வாழைகள் அறுவடைக்கு தயாராக இருந்தது. செவ்வாழை, கதளி, தேன் கதிர்  என உயர் ரக வாழை பயிர்கள் அவை.  அடித்த  சூறைக்காற்று இந்த வாழை மரங்களை அடியோடு சாய்த்து விட்டது. இன்னும் சில நாட்களில் அறுவடை செய்ய தயாராக இருந்த அந்த வாழைகள் முற்றாக முடிந்துவிட்டது. விவசாயிகள் போட்டு வளர்த்த இடுபொருள் பல லட்சம் ரூபாய் சூறை காற்றோடு சேர்ந்து மடிந்துவிட்டது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கண்ணீரோடு கதறுகிறார்கள். அரசிடம் எங்களுக்கு இழப்பீடு கொடுங்கள் என வேதனையோடு கேட்கிறார்கள். 

 

ஆனால் இதேபோல் சென்ற வருடமும் வீசிய சூறைக்காற்றில் வாழை உட்பட விவசாய பொருட்கள் பலவும் அழிந்தது. அப்போதும் அரசு அதிகாரிகள் வந்தார்கள். ஏதோ கணக்கெடுத்தார்கள். பிறகு சென்றார்கள் ஆனால் இதுவரை பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு எதுவுமே வரவில்லை என இப்போதும் கண்ணீரோடு கூறுகிறார்கள். பல்வேறு மாநிலங்களில் அந்தந்த அரசுகள் விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு இதுபோன்ற இயற்கை சீற்றத்தால் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு தனிநபர் பயிர் காப்பீட்டு திட்டம் செய்துள்ளது.

 

அதன் மூலமாக விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைத்து வருகிறது. அது போல் தமிழகத்திலும் தனிநபர் பயிர் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என இப்போதும் கூறி வருகிறார்கள். தென்னையைப் பெத்தா இளநீரு, பிள்ளையப் பெத்தா கண்ணீரு என்பது உண்மையோ பொய்யோ, இந்த வாழையை வளர்த்த எங்கள் வாழ்வு கண்ணீராக உள்ளது என கவலையோடு கூறுகிறார்கள் ஈரோடு மாவட்ட விவசாயிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.