Skip to main content

தேர்தல் ஆணையத்தின் கவனக்குறைவு; பிரெயிலி முறையில் வாக்களிப்பதில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குப் புதிய சிக்கல்

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

 


100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று கோடி கோடியாக கொட்டி விளம்பரங்களை செய்து வருகிறது தேர்தல் ஆணையம்.  ஆனால் பார்வை மாற்றுத்திறனாளிகளை வாக்களிப்பில் குழப்பும் வகையில் வாக்கு பதிவு இயந்திரத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


 பார்வை மாற்றுத்திறனாளிகளும் சம பங்கேற்புடன் வாக்களிக்கும் வகையில் கடந்த 2009 முதல் இந்தியத் தேர்தல் ஆணையம் பிரெயில் முறையில் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மின்னணு வாக்களிக்கும் இயந்திரத்தில் வேட்பாளர்களுக்கு அருகில் அவர்களுக்கான எண்கள் வரிசையாக பிரெயில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்களிக்கும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளிக்கு பிரெயில் வடிவிலான வேட்பாளர் பட்டியல் (ballot sheet) வாக்குச்சாவடியில் வழங்கப்படும். அதில் தனக்கு விருப்பமான வேட்பாளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்ளும் அந்தப் பார்வை மாற்றுத்திறனாளி, மின்னணு வாக்கு இயந்திரத்தில் அந்த எண்ணைத் தடவிப்பார்த்து, உறுதிசெய்துகொண்டு, தனது வாக்கினைச் செலுத்துவார்.

 

e


     இந்த நடைமுறையின்படி, பிரெயில் முறையில் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் வேட்பாளருக்கான வரிசை எண்களாக மின்னணு இயந்திரத்தில் ஒட்டப்பட்டிருக்கும். அதாவது, ஒரு மின்னணு வாக்கு இயந்திரத்தில் 1 முதல் 16 வரை அந்தந்த வேட்பாளருக்கு நேராக அவை ஒட்டப்பட்டிருக்கும். போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 16 ஐ தாண்டினால், அடுத்த மின்னணு வாக்கு இயந்திரத்தில் 17 முதல் எண்கள் தொடங்கும்.

 

 ஒருவேலை வாக்காளரின் தேர்வு எண் 20 ஆக இருக்கும் பட்சத்தில் அவர் இரண்டாவது வாக்கு இயந்திரத்தில் 20 எண்ணைத் தடவிப்பார்த்து,  வாக்கைச் செலுத்த முடியும். தேர்தல் ஆணையத்தின் இந்த நடைமுறையை மனமுவந்து வரவேற்றார்கள் பார்வை மாற்றுத்திறனாளிகள். ஆனால் இந்த 17 வது மக்களவை தேர்தலில் மாற்றம் என்ற பெயரில் பார்வை மாற்றுத்திறனாளிகளை குழப்பும் செயலில் இறங்கியுள்ளது தேர்தல் ஆணையம். 


இந்த குழப்பத்தால் இவர்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாமல் போகும் என்ற கவலையில் உள்ளனர்.

ப. சரவணமணி கண்டன் (துணைச்செயலர் ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்) கூறும் போது..
  ‘’2004 ஆண்டு முதல் உள்ள நடைமுறைதான் இந்தத் தேர்தலிலும் தொடரும் என்ற எண்ணத்தோடு நேற்று மின்னணு வாக்கு இயந்திரத்தில் பிரெயில் ஸ்டிக்கர்கள் ஒட்டுவது குறித்த செய்முறை நிகழ்விற்காக ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நானும் சக ஆசிரியர் பாஸ்கர் அவர்களும் சென்றிருந்தோம். அங்கு நாங்கள் கண்டது எங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அங்கு மின்னணு இயந்திரங்களில் பிரெயில் ஸ்டிக்கர்களுக்குப் பதிலாக எண்கள் அப்படியே அந்த இயந்திரத்திலேயே (Encripted) பொறிக்கப்பட்டிருந்தன. அதாவது, எல்லா இயந்திரங்களிலும் 1 முதல் 16 என்பதாகவே அந்த எண்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, 25 வது வரிசை எண்கொண்ட ஒரு வேட்பாளரை பார்வையுள்ள நபர் எளிதில் 25 என்ற எண்ணை வைத்து அடையாளம் காண இயலும். 


ஆனால், அதே 25 வரிசை எண்கொண்ட வேட்பாளரை ஒரு பார்வை மாற்றுத்திறனாளி தேடினால், 2ஆவது இயந்திரத்தில் அந்த எண்  இருக்காது. அந்த இயந்திரத்திலும் 1 – 16 வரைதான் இருக்கும். எனவே ஒரு பார்வை மாற்றுத்திறனாளி 25 என்பதற்குப் பதிலாக 25-16=9 என்று கணக்கிட்டு, இரண்டாவது இயந்திரத்தில் 9 என்ற எண்ணுக்கு அவர் தனது வாக்கைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய குழப்பங்களும் காலவிரயமும் ஏற்படும் மேலும் நாங்கள் தேர்வு செய்துள்ள ஒரு வேட்பாளரை தேர்வு செய்வதில் குழப்பமும் சிக்கலும் ஏற்படும்.


 தேர்தல் ஆணையம் இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது, பார்வை மாற்றுத்திறனாளிகளைக் கலந்தாலோசித்திருந்தால் இந்த சிக்கலைத் தவிர்த்திருக்கலாம்.
 ஆகவே இன்னும் சில நாட்கள் இருப்பதால் பழைய முறையில் வரிசை எண்களை பிரெய்ல் ஸ்டிக்கர்களாக ஒட்ட வேண்டும் என்றார்.

சார்ந்த செய்திகள்