Skip to main content

கரூர் தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் முறைகேடு!- இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 18/12/2020 | Edited on 18/12/2020

 

election commission of india chennai high court

கரூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி, அத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் தொடர்ந்த வழக்கில், இந்திய  தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்காக, கடந்த நவம்பர் 16- ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

 

இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை எனக் கூறி, கரூர் தொகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகுமார் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அவர் தனது மனுவில்,‘கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதோடு, ஆவண அடையாளங்கள் இல்லாத பலரின் பெயர்களும், இறந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளன. இதுபோன்ற குளறுபடிகள் உள்ளபோது, தேர்தல் நேர்மையாக நடக்குமா? இதுதொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும், கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் கடந்த நவம்பர் 7- ஆம் தேதியே நான் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை உடனடியாக ஆய்வு செய்து, சரி செய்ய  நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியுள்ளார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் டிசம்பர் 22- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

 

சார்ந்த செய்திகள்