Skip to main content

“ஆளுங்கட்சிகளின் ஊதுகுழல்களாக தலைமைச் செயலாளரும், தேர்தல் ஆணையமும் செயல்படுவதா?" -  மு.க.ஸ்டாலின்

Published on 08/10/2018 | Edited on 08/10/2018
 
stalin




சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கின்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகியவற்றுடன், சட்டமன்றத்தை தன்னிச்சையாகக் கலைத்துக் கொண்ட தெலங்கானாவுக்கும் சேர்த்து 5 மாநிலத் தேர்தல்களுக்கான அட்டவணையை, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒ.பி.ரவத் வெளியிட்டிருக்கிறார். அதேபோல், கர்நாடகாவில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும், மூன்று எம்.பி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இடைத்தேர்தலைச் சந்திக்கின்ற திருவாரூர் -திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தேதி அவருடைய அறிவிப்பில் இடம்பெறவில்லை. இரண்டு தொகுதிகளிலும் தற்போது இடைத்தேர்தல் இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்திருப்பது, ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில், தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை தமிழ்நாட்டு மக்களின் மனதில் விதைத்துள்ளது.
 

தமிழகத்தை ஆளுகின்ற அ.தி.மு.க அரசின் மக்கள் விரோதப் போக்குகள் மாநிலமெங்கும் கடும் அதிருப்தி அலைகளை எழுப்பியிருப்பதால், உள்ளாட்சித் தேர்தலைக்கூட கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தாமல், ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி காலந்தாழ்த்தி வருகிறது. தேர்தலை நடத்தினால் அதலபாதாளத்தில் தலைகுப்புற விழக்கூடிய படுதோல்வியைச் சந்திக்க நேரிடும் என்பதால், ஊராட்சி அமைப்புகள் தொடங்கி மாநகராட்சிகள் வரை அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழியின்றி, உள்ளாட்சி நிர்வாகம் மொத்தமும் நாற்றமடிக்கின்ற  நிலையிலும், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல்  அடிப்படை ஜனநாயக அமைப்புகளை ஏற்படுத்தாமல் இழுத்தடிக்கிறது. இந்த நிலையில், இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆட்சியாளர்களுக்கு தெம்பும் இல்லை, திராணியும் இல்லை.


மக்களை நேரில் சந்தித்தால் ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் தொடங்கி அமைச்சர்கள், முதலமைச்சர் வரை பெரும் சங்கடத்தையும் சங்கிலித் தொடர்போன்ற எதிர்வினைகளையும் நேரில் காணப்போவது நிச்சயம். அதனைத் தவிர்ப்பதற்காக இடைத்தேர்தலை தள்ளிவைக்கும் முயற்சியை, தலைமைச் செயலாளர் மூலமாக நிறைவேற்றியிருக்கிறார்கள். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ். அவர்கள் தனது குடிமைப் பணியில் பெற்ற நற்பெயர்களுக்கு மாறாக, தற்போது ஆளுங்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் போலச்  செயல்பட்டு வருவதை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன். அரசு நிகழ்ச்சிகளை ஆளுங்கட்சியின் தனிப்பட்ட விழா போல நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருவதும், சுயவிருப்புவெறுப்பின் அடிப்படையில் சட்டம் -ஒழுங்கு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதும் தலைமைச் செயலாளரின் அண்மைக்கால செயல்பாடுகளாக இருக்கின்றன.


இந்தநிலையில், இரண்டு தொகுதி  இடைத்தேர்தலை, பருவ மழையைக் காரணம் காட்டித் தள்ளி வைக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதம் அவர், அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்துவிட்டாரோ என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் தேர்தலே நடந்ததில்லையா? அம்மையார் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது நடைபெற்ற 3 தொகுதிக்கான தேர்தல்கள் பருவமழைக் காலமான நவம்பர் மாதத்தில்தானே நடைபெற்றன.


அதுபோல ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலும் மழைக்காலத்தை ஒட்டிய டிசம்பர் மாதத்தில்தானே நடந்தது? தற்போது 5 மாநிலத் தேர்தல்கள் நவம்பர் - டிசம்பரில் நடைபெறவுள்ள நிலையில், 2 தொகுதி இடைத்தேர்தலை மட்டும் மழையின் காரணமாகத் தள்ளி வைக்க வேண்டிய அவசியம் என்ன?


ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடா குறித்த புகார்களின் அடிப்படையில் ஆதாரப்பூர்வமான பட்டியல்கள் அமைச்சர்களின் வீட்டு ரெய்டுகளில் சிக்கி, ஜனநாயகத்தை இந்த அரசு எந்தளவு சீரழித்திருக்கிறது என்பது அம்பலமானது. அதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இடைத்தேர்தல் மீண்டும் 2017 டிசம்பரில் நடத்தப்பட்டபோதும்,  ஏராளமான முறைகேடுகளும் பணப் பட்டுவாடாவும் நடந்தன. அதையும் மீறி அப்போது தேர்தலை நடத்தியது ஆணையம். ஆனால், இப்போது இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களை தலைமைச் செயலாளரின் கடிதத்தைக் காரணம் காட்டி தலைமைத் தேர்தல் ஆணையம் நடத்தாமல் இருப்பது வியப்பளிக்கிறது.


திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பாக சட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தாலும் அதுகுறித்து நீதிமன்றத்தின் விளக்கத்தைப் பெறுவதில் அக்கறை காட்டாமல், இடைத்தேர்தலை தள்ளி வைப்பதில் முனைப்பு காட்டுவது, மாநிலத்தை ஆளுகிற கட்சிக்கும், தமிழ்நாட்டில் மலர கணக்குப் போட்டு கனவு காணும் மத்திய ஆளும் கட்சிக்கும் உள்ள தேர்தல் பயத்தைக் காட்டுவதன் அடிப்படையில் நடந்த முயற்சியோ என்ற சந்தேகத்தை வலுவடையச் செய்கிறது.


குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பின்போதே மத்திய பா.ஜ.க. அரசின் விருப்பத்திற்கேற்ப, குறிப்பாக பிரதமர் மோடி அவர்களின் பயணங்களுக்கேற்ப தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதாக நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள் குரல் கொடுத்தன. அதனைப் புறக்கணித்த தலைமைத் தேர்தல் ஆணையம், தற்போது தமிழகத்தின் 2 தொகுதி இடைத்தேர்தல்கள் தொடர்பாக தலைமைச் செயலாளரின் கடிதத்தைக் காரணம் காட்டியிருப்பதும், பருவமழையைக் காட்டி ஒத்தி வைப்பதும் நியாயமான நடுநிலை நடவடிக்கையாகத் தெரியவில்லை.


நொண்டிக் குதிரைக்கு சறுக்கியதே சாக்கு என கிராமப்புறங்களில் சொல்வதுபோல, மத்திய -மாநில ஆளுங்கட்சிகளுக்கு தேர்தல் களம் சற்றும் சாதகமாக இல்லை - படுதோல்வி நிச்சயம் என்பதால் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. சுயாட்சிமிக்க அமைப்பான இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமும் - அரசு நிர்வாகத்தைப் பாரபட்சமின்றி நடத்த வேண்டிய தலைமைச் செயலாளரும் மத்திய - மாநில ஆட்சியாளர்களின் ஊதுகுழல்களாக மாறுகிறார்களோ என்ற சந்தேகத்தை  நீக்கும் வகையிலும், ஜனநாயக நெறிமுறைகள் பாதுகாக்கப்படும் விதத்திலும் திருவாரூர் -திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்திட வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையத்தை வலிறுத்துகிறேன்!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.