Skip to main content

அரசு அதிகாரிகளை மிரட்டிய திமுக பிரமுகர்

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

DMK member who threatened government officials sivaganga

 

சிவகங்கை பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமாக சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் கடந்த 6 ஆம் தேதியன்று ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் பேருந்து நிலையப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

 

சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகளில் அனுமதியின்றி கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாகவும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்திருப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. 

 

இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதியன்று நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, நகராட்சியின் நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலர் திலகவதி தலைமையிலான ஊழியர்கள் வரி கட்டாத கடைகளுக்கு சீல் வைத்தனர். அதுமட்டுமல்லாமல், பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர்.

 

இந்த விஷயம், நகராட்சி ஒப்பந்ததாரரும் திமுக பிரமுகருமான சுந்தரபாண்டி என்பவருக்கு, தெரியவந்துள்ளது. தன்னுடைய பொருட்களை யார் அகற்றியது எனக் கேட்டு அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது திமுக பிரமுகர் சுந்தரபாண்டி பேசும்போது, '' என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம எப்படி அகற்றலாம். என்னோட பொருள் மீது கைவைச்சா அடிப்பேன் என மிரட்டியுள்ளார். மேலும், நீங்க எல்லாரும் எவ்ளோ லஞ்சம் வாங்குறீங்கன்னு இந்த ஊருக்கே தெரியும்” எனக்கூறி அதிகாரிகளைப் பதறவைத்தார். அதன்பின், அங்கிருந்தவர்கள் சுந்தரபாண்டியை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.

 

இந்தச் சம்பவத்தை அங்கிருந்த ஊழியர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்தக் காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்