இந்தாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று உரையாற்றினார். பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது நாளின் போது மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். ஆனால், இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கென தனி அறிவிப்பும் எதுவும் வெளியிடவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில் நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசுக்கு எதிராக வரும் 8 ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும், எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்காதது, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது என நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8, சனிக்கிழமை, மாலை தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கழக மாவட்டங்களின் சார்பில் "கண்டன பொதுக்கூட்டம்" நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.