Skip to main content

பாண்டியன் கோட்டையில் பானை குறியீடுகள் கண்டெடுப்பு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Discovery of Pot Symbols at Pandyan Fort

காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் பானை குறியீடுகள், கீறல்கள், எலும்பாலான முனைக்கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா, தலைவர் நா.சுந்தரராஜன்,செயலாளர் இரா.நரசிம்மன்,கள ஆய்வாளர் கா. சரவணன், உறுப்பினர் சு.காளீஸ்வரன் ஆகியோர் காளையார்கோயில் பாண்டியன் கோட்டை பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில்  ஈடுபட்டதில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர், புலவர் கா. காளிராசா தெரிவித்ததாவது, 'திருக்கானப்பேர் என்னும் காளையார் கோவிலில் சங்க கால கோட்டை, பாண்டியன் கோட்டை என்று வழங்கப்படுகிறது. இக்கோட்டையைச் சுற்றி அகழியுடனும் நடுவில் நீராவி குளத்துடனும் மண் மேடாக 37 ஏக்கரில் இன்றும்  காட்சி தருகிறது.

கானப்பேர் பாண்டியன் கோட்டை பற்றிய செய்தி புறநானூற்றில் 21 வது பாடலில் இடம் பெற்றுள்ளது, இப்பகுதியை குறுநில மன்னனான வேங்கை மார்பன் ஆட்சி செய்ததும் அவனது கோட்டையை பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வெற்றி பெற்றதும் அக்கோட்டையின் சிறப்புகளும் பாடலில் இடம் பெறுகின்றன.இலக்கியத்தின் சான்றாக இன்றும் இக்கோட்டை காணப்படுகிறது. மேட்டுப்பகுதி முழுவதும்  பானை ஓடுகள் பெருமளவில் சிதறிக் கிடக்கின்றன.

சிவகங்கை தொல்நடைக் குழு அவ்வப்போது இக்கோட்டைப் பகுதியில்  மேற்பரப்பு கள ஆய்வு செய்து வருகிறது. அதில் தொடர்ச்சியாக பழமையான பொருட்கள் கிடைத்து வருகின்றன. வட்டச் சில்லுகள், மேற்கூரை ஓட்டு எச்சங்கள், சங்க கால செங்கல் எச்சங்கள் தொடர்ச்சியாக கிடைத்துள்ளன. மேலும் பானை ஓட்டுக்கிறல்கள், குறியீடுகள் கிடைத்ததோடு 2000 ஆண்டுகளுக்கு பழமையான தமிழி எழுத்தில் மோசிதபன் என்று எழுதப்பட்ட பானை ஓடும் முன்பு கிடைத்தது, நெசவுக்கு அல்லது வேறொரு காரணத்திற்காக பயன்படுத்தப்பட்ட எலும்பாலான முனையுடைய கருவி ஒன்றும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது‌.

பானை ஓட்டு குறியீடுகள்

சிவகங்கை தொல்நடைக் குழுவினர் மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில்  தற்பொழுதும் பானை குறியீடுகள் கீறல்கள் கிடைத்துள்ளன.

பானை ஒட்டு குறியீடுகள் கீறல்கள் தங்களது பொருட்களை அடையாளப்படுத்தும் விதமாகவோ அல்லது வேறு செய்தியை தெரிவிப்பதற்காகவோ பொறிக்கப்பட்டு இருக்கலாம். மேலும் இவை எழுத்தறிவுக்கு முன்பிருந்தும் எழுத்தறிவு பெற்ற பிறகும் தொடர்ச்சியாக பயன்படுத்தப் படுகின்றன. இன்றும் நம்மிடையே குறியீடுகள் பொறிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. முக்கோண வடிவிலான குறியீடு, சதுர வடிவிலான குறியீடு சிதைவுற்ற வடிவில் கிடைத்துள்ளன, க ண போன்ற தமிழி எழுத்து வடிவமுடையது போன்ற பானையோடு கிடைத்து இருந்தாலும் தொல்லியல் அறிஞர்களின் மேலாய்வில் அது குறியீடாகவே கருதப்படுகிறது.

Discovery of Pot Symbols at Pandyan Fort



எலும்பாலான கருவி முனை

சங்க காலத்திலேயே நமது முன்னோர்கள் நெசவு உள்ளிட்ட தொழில்களுக்கு நுட்பமான பல கருவிகளையும் பயன்படுத்தி உள்ளனர். தற்போது கிடைத்து இருக்கக்கூடிய எழும்பாலான கருவி முனையின் முனைப்பகுதி சற்று சேதமடைந்துள்ளது. இதே போன்ற எலும்பாலான கருவி முனை முன்பும் இங்கே கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விடத்தில் அகழாய்வு செய்ய தொல்லியல் துறை அமைச்சரிடம் விண்ணப்பம் வழங்கியதின் வழி தொல்லியல் துறை கள மேலாய்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு செய்யப்படும் என்ற தகவல் சிவகங்கை தொல் நடைக் குழுவினருக்கு தெரிவித்துள்ளனர், இவ்விடத்தின் பழமையை அறிந்து கொள்ளவும் பாதுகாக்கவும் தொல்லியல் துறை அடுத்து வரும்  ஆண்டுகளில் அகழாய்வு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கீழடியில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Discovery of pots with fish motifs on the bottom!

கீழடி 10 ஆம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட 2 பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கீழடி 10ஆம் கட்ட அகழாய்வில் அகழாய்வுக்குழி எண் YW11/3 இல் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் முறையே 58 செ.மீ மற்றும் 96 செ.மீ ஆழத்தில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்புரம் சிவப்பு வண்ணப்பூச்சு பெற்ற பளபளப்பான பானை ஓடுகளில் இம்மீன் உருவங்கள் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன. பகுதி உடைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ள மீன் உருவம் பொறிக்கப்பட்ட இப்பானை ஓடுகளின் நீளம் மற்றும் அகலம் முறையே 4X 5 செ.மீ மற்றும் 4 X3 செ.மீ ஆகும்” எனத் தெரிவித்துள்ளார். 

Discovery of pots with fish motifs on the bottom!

முன்னதாக, ‘கடலூர் மாவட்டம், மருங்கூரில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வில் இராஜராஜன் காலச் செம்பு நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நாணயம் 23.3 மி.மீ விட்டமும் 2.5 மி.மீ தடிமனும் 3 கிராம் எடையும் கொண்டது’ என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Next Story

பொற்பனைக்கோட்டை அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்த முதல்வர்!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
cm stalin who started the excavation work

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால வட்டக்கோட்டைகளில் சற்றும் சிதிலமடையாத கோட்டை, கொத்தலம், அகலியுடன் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ளது. கோட்டையின் நுழைவாயில்களில் முனீஸ்வரன், காளியம்மன் போன்ற காவல் தெய்வங்கள் கோயில்களாக கட்டி வழிபட்டு வருகின்றனர். 

இந்த கோட்டைக்குள் உள்ள நீர்வாவிக் குளக்கரையில் துணி துவைக்கப் பயன்படுத்தப்பட்ட கல்லில் கி.பி. 2 அல்லது 3 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துகளில் உள்ள கல்வெட்டு ஒன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கல்லில், கோட்டைத் தலைவன் கணங்குமரன் ஆநிரைபூசலில் இறந்த தகவலை சொல்லும் நடுகல் என்பது தெரிய வந்தது. இதன் பிறகு பல்வேறு ஆய்வாளர்களின் வருகையை தொடர்ந்து கோட்டைப் பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நீதிமன்றம் மூலம் அகழாய்வுக்கான உத்தரவும் பெறப்பட்டது.

cm stalin who started the excavation work

தொடர்ந்து 2021 ம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அகழாய்வு செய்தது. அடுத்தகட்டமாக 2022-2023 ம் ஆண்டில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் தங்கத்துரையை இயக்குனராக கொண்டு அவரது ஆய்வுக் குழுவினர் கடந்த ஆண்டு அகழாய்வு செய்தனர். அகழாய்வில் சங்ககால மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், செங்கல், மணிகள், வட்டசில், தங்க ஆபரணம், போன்ற ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வட்ட வடிவில் சுடுசெங்கல் கட்டுமானம் நீர்வழித்தடம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.

cm stalin who started the excavation work

இந்த நிலையில் அடுத்தகட்ட அகழாய்விற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று செவ்வாய் கிழமை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொளி காட்சி வாயிலாக அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பொற்பனைக்கோட்டை அகழாய்வுத்திடலில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, மக்கள் பிரநிதிகள், உள்ளாட்சி பிரதிநிகள், தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுக் குழுவினர் ஆகியோர்  கலந்து கொண்டனர். இந்த அகழாய்வில் சங்ககால மக்கள் வாழ்ந்த வரலாறுகள் சான்றுகளாக வெளிப்படும் என்ற கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அகழாய்வு செய்யப்பட்ட குழிகள் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கிடைத்துள்ள பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

cm stalin who started the excavation work

தற்போது நீர்வாவி குளத்தின் தென்மேற்கு கரைப் பகுதியில் உள்ள மேடான பகுதிகளில் அகழாய்வு செய்ய பணிகள் தொடங்கியுள்ளது. இதே போல மேலும் சில இடங்களையும் ஆய்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அகழாய்வு நடக்கும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார்.