Skip to main content

கழிவுநீரை வெளியேற்றிய 4 தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Disconnection of power supply to 4 factories that discharged sewage

 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. சிப்காட்டில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவுநீரால் பாலத்தொழு குளம் மாசடைவதாகப் பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது. புகாரை அடுத்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகம் 3 அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு மூலம் கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை ஆய்வு மேற்கொண்டனர்.

 

இதில் 3 சாயத் தொழிற்சாலைகள் கழிவு நீரைச் சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியதை அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழு கண்டுபிடித்தனர். இதையடுத்து இந்த மூன்று சாயத் தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டு அந்த மூன்று தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அதேபோல், சிப்காட்டில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலை கழிவு நீரைத் தொழிற்சாலை வளாகத்திற்கு வெளியே வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த ரசாயன தொழிற்சாலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

 

சிப்காட் வளாகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும், தங்களின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் மற்றும் காற்று மாசு தடுப்பு சாதனங்களை முறையாகவும் தொடர்ச்சியாகவும் இயக்கி, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும் எனவும், அனைத்து தொழிற்சாலைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுத் தவறு இழைக்கும் தொழிற்சாலை மீது சட்ட ரீதியாகத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மாசுக் கட்டுப்பாடு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்