Skip to main content

அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை; போலீசார் தீவிர விசாரணை

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

dharmapuri government school teachers incident 

 

தர்மபுரி அருகே டிஎன்வி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 46). இவர் சவுளுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலையில், வழக்கம்போல் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சீனிவாசன், தனது அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு, தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

 

அவர் அறைக்குள் சென்ற வேகத்தையும், கதவை வேகமாக சாத்தியதையும் பார்த்த மனைவி,  கூச்சலிட்டு உள்ளார். இவரின் கூச்சல் சத்தம் கேட்டு அங்கு வந்த  அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக் கொண்டு அறைக்குள் சென்று பார்த்தபோது, சீனிவாசன் ஆபத்தான நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி நகர காவல்துறையினர், சீனிவாசன் உடலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஆசிரியர் சீனிவாசன் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி புதிதாக வீடு கட்டியுள்ளார். அந்தக் கடனை திரும்பச் செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்பத் தகராறில் இவ்வாறு செய்து கொண்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்