Skip to main content

விதிகளை மீறி இயங்கி வந்த 3 சாயப்பட்டறைகள் இடிப்பு

Published on 05/01/2019 | Edited on 05/01/2019

 

ss

 

சேலத்தில் அனுமதியின்றி இயங்கிவந்த மூன்று சாயப்பட்டறைகளை பொக்லைன்  இயந்திரங்கள் மூலம் அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

 


சேலம் மாநகரப் பகுதியில் கருங்கல்பட்டி, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, குகை உள்ளிட்ட பகுதிகளில் சாயப்பட்டறைகள் அதிகளவில் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெறாமல் இயங்குவதாகவும், சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக கழிவுநீர் வாய்க்கால்களில் திறந்து விடப்படுவதாகவும் புகார்கள் வந்தன.


சேலம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், சாயப்பட்டறைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் விஸ்வநாதன், ரங்கராஜ் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழு, சேலம் மாநகரில் இயங்கி வரும் சாயப்பட்டறைகளை வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 4, 2019) திடீரென ஆய்வு செய்தனர். 

 


வெங்கட்ராமன், லோகநாதன், ரமேஷ் ஆகிய மூன்று பேர் நடத்தி வந்த சாயப்பட்டறைகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாமல் இருப்பதும், சாயக்கழிவுகளை நேரடியாக கழிவுநீர்க் கால்வாய்களில் திறந்துவிட்டு வருவதும் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, விதிகளை மீறி இயங்கியதாக அந்த மூவரின் சாயப்பட்டறைகளையும், அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். 

 


இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ''அன்னதானப்பட்டி பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக  முறையான அனுமதி பெறாமலும், விதிமுறைகளுக்கு புறம்பாகவும் செயல்பட்டு வந்த மூன்று சாயப்பட்டறைகளை இடித்து அகற்றி இருக்கிறோம். 

 


இதில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான சாயப்பட்டறை தற்போது மூன்றாவது முறையாக இடிக்கப்பட்டு உள்ளது. விதிகளை மீறியதாக ஏற்கனவே இரண்டு முறை அவருடைய சாயப்பட்டறை இடித்து அகற்றப்பட்டு உள்ளது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கையையும் மீறி மீண்டும் அவர் அனுமதியின்றி சாயப்பட்டறை நடத்தி வந்துள்ளார்,'' என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்