அரசியலில் இருந்து விலகுவதாக ஜெ.தீபா அறிவித்துள்ளார்.
![d](http://image.nakkheeran.in/cdn/farfuture/Vf497b8jxCxsydZJzOwsFlulJeEl6sYH3C3wfTK6pkM/1564489205/sites/default/files/inline-images/deepa_5.jpg)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. ஜெ.வின் மறைவிற்கு பிறகு ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா’ பேரவையை தொடங்கினார். தொடர்ந்து ஆலோசனைக்கூட்டங்களும், அறிவிப்புகளும் என்று அரசியலில் தீவிரமாக இருந்தார். தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவில் இருந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிட்டது.
பின்னர் பேரவையில் ஏற்பட்ட குளறுபடிகளால் ஜெ.தீபாவிற்கு சேர்ந்த கூட்டம் குறைந்தது. இதனால், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார். அதோடு இல்லாமல், ஜெயலலிதா என்னுடைய சொந்த குடும்பம். சொந்த குடும்பமாக இருந்துகொண்டு அதிமுகவை அழிவுபாதையில் கொண்டு செல்ல விரும்பவில்லை. இதனால்தான் இந்த மனமாற்றம். அதிமுகவுடன் மூன்று மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்கள் இயக்கம் அதிமுகவுடன் இணைவது உறுதி. எங்களை பொறுத்தவரையில் நாங்கள் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. எனக்கு எந்த பதவியும் தேவையில்லை. அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கடிதம் கொடுக்க இருக்கிறோம். தேர்தலுக்கு பிறகு இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறும்.
எங்கள் பேரவை தேர்லில் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்களின் மனதில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தும். எனவே நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்றார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்கு பின்னர் மனமாற்றம் அடைந்து, தற்போது அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்.
’’அரசியலில் இருந்து விலகுகிறேன். என்னுடைய உடல்நிலை காரணமாக நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். இனி மீண்டும் அரசியலுக்கு வரவே மாட்டேன். அதற்கான வாய்ப்பே இல்லை’’என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ‘’அரசியலுக்கு வந்ததால் பல இன்னல்களை சந்தித்தேன். நான் பெண்ணாக இருப்பதால் சிலவற்றை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. அதனால், அரசியல் தேவையே இல்லை என்று நினைத்தேன். நான் அரசியலுக்கு வந்ததே தவறு. இதை நான் பலமுறை யோசித்திருக்கிறேன்.
என் வீட்டு முன் மக்கள் கூட்டம் நின்று என்னை கட்டாயப்படுத்தி அழைத்ததால் தான் நான் அரசியலுக்கு வந்தேன். மற்றபடி, ஜெயலலிதா சொத்துக்கு நான் ஆசைப்படவில்லை. எனக்கு சொத்து வேண்டும் என்றால் அப்போதே அவரிடம் கேட்டிருப்பேன்’’என்று தெரிவித்துள்ளார்.