Skip to main content

மழைநீரில் மிதக்கும் கடலூர்...  தி.மு.க தலைவர் ஸ்டாலின் விசிட்!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

 

'புரெவி' புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டு விட்டுப் பெய்து வருகிறது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து தாழ்வான பகுதிகளில் குளம் போல காட்சியளிக்கிறது. கனமழை காரணமாக கடலூர்-சிதம்பரம் பிரதான சாலையில், காரைக்காடு பகுதியில் வெள்ளநீர் ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

 

அதேபோல், சென்னை-கும்பகோணம் சாலையில் வடலூர் அருகே உள்ள மருவாய் கிராமத்தில் வெள்ளநீர் உள்ளே புகுந்து செல்வதால் அந்தச் சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் குள்ளஞ்சாவடி- ஆலப்பாக்கம் சாலை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. திட்டக்குடி அருகே உள்ளது வெலிங்டன் நீர்த்தேக்கப் பகுதியிலிருந்து வடிகால் ஓடை ஒன்று செல்கிறது. இந்த ஓடையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், நாவலூர்-சாத்தனத்தம் கிராமத்திற்கு இடையில், ஓடையின் தரைப் பாலத்தின் மேல் தண்ணீர் நிறைந்து செல்கிறது. இதனால், ஓடையின் இரு பக்கங்களிலும் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல், மன்னம்பாடி-விளாங்காட்டூர் இடையே உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், இங்கும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையில் 4,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், திருநாரையூர், கொளக்குடி, சிறகிழந்த நல்லூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், பரவாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால், என்.எல்.சி சுரங்கங்களில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. குறிஞ்சிப்பாடி அருகிலுள்ள கல்குளம், ஓணான்குப்பம், கொளக்குடி ஆகிய ஊர்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. 

 

இப்பகுதியிலுள்ள மக்கள், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், விவசாய நிலங்களில் பயிர் செய்துள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கடலூர் மாவட்டத்தில் கிழக்குப்பகுதி வெள்ளக்காடாக நிரம்பி வழிகின்றன. இதனால், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிடையே போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக சிதம்பரத்தில் 30 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளது. திட்டக்குடி அருகில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கு வெள்ளாற்றின் குறுக்கே தொழுதூர் அருகே கட்டப்பட்டுள்ள அணை மூலம், வெலிங்டன் ஏரிக்குத் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

 

இன்று மாலை வரை பதினாறு அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. அதன் முழுக் கொள்ளளவு 28 அடி. மேலும், ஏரிக்கு வரும் வெங்கனூர் புடையூர் ஓடைகள் வழியாகவும் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, வெள்ளாற்றில் தற்போதைய 'புரெவி' புயல் காரணமாகச் சிறிதளவு தண்ணீர் ஓடும் காட்சியைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று பார்த்து வருவதோடு, செல்ஃபோன் மூலம் செல்ஃபி எடுத்தும் சந்தோஷம் அடைந்து வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்குடி, சிதம்பரம், கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகள் மழை வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
 

cnc


பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று கடலூர் பகுதியில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பாதிப்புக்குட்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டதோடு, பொதுமக்களையும் விவசாயிகளையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கடலூர் எம்.பி ரமேஷ் உட்பட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உடன் இருந்தனர். மழை வெள்ளத்தின் போது ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் மக்களைப் பாதுகாக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளையும் அரசு ஊழியர்களையும் விழிப்புடன் இருந்து பாதுகாப்புப் பணிகளைச் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்