Skip to main content

வெடித்துச் சிதறிய ஃப்ரிட்ஜ்; திதி கொடுக்க வந்த இடத்தில் மூவர் உயிரிழப்பு

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

 A cracked fridge; Three people lost their lives at the place where they came to give didi

 

ஃப்ரிட்ஜ் வெடித்து மூன்று பேர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை அடுத்துள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் வசித்து வந்தார் கிரிஜா. இவரது கணவர் வெங்கட்ராமன் கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதம் இறந்த நிலையில், கிரிஜா துபாயில் வசித்து வந்த தனது மகள் பார்கவி வீட்டுக்குச் சென்று வசித்து வந்தார். இந்நிலையில் கணவருக்கு திதி கொடுப்பதற்காக கிரிஜா அவரது மகள் பார்கவி, அவருடைய கணவர் ராஜ்குமார் மற்றும் பேத்தி ஆர்த்தி ஆகியோர் நேற்று துபாயிலிருந்து ஊரப்பாக்கத்தில் உள்ள குடியிருப்புக்கு வந்துள்ளனர். இவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல கிரிஜாவின் தங்கை ராதா வந்திருந்தார். நேற்று இரவு சாப்பிட்ட பிறகு அனைவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அதிகாலை சுமார் 5 மணி அளவில் வீட்டிலிருந்த ஃபிரிட்ஜ் வெடித்துச் சிதறியது. இதனால் வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

 

கிரிஜா, ராதா ஆகிய இருவரும் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருக்க, பார்கவி மற்றும் அவரது கணவர் ராஜ்குமார் அவர்களுடைய மகள் ஆர்த்தி ஆகியோர் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கரும்புகை வருவதை அறிந்த ராஜ்குமார் மனைவி பார்கவியும், மகள் ஆர்த்தியும் இருந்த அறையைப் பூட்டிவிட்டு கழிவறைக்குச் சென்று தானும் தாழிட்டுக் கொண்டார். வீடு முழுக்க கரும்புகை சூழ்ந்த நிலையில் மற்றொரு அறையிலிருந்த கிரிஜாவும், ராதாவும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

 

 A cracked fridge; Three people lost their lives at the place where they came to give didi

 

அதேபோல் கழிவறையில் இருந்த ராஜ்குமாரும் மூச்சுத் திணறி உயிரிழந்தார். மற்றொரு அறையில் இருந்த பார்கவியும், மகள் ஆர்த்தியும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் அந்த ஃப்ரிட்ஜ் பல நாட்களாக உபயோகத்தில் இல்லாத நிலையில் திடீரென பயன்படுத்தியதால் மின்கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறியது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிரிஜா, ராதா, ராஜ்குமார் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திதி கொடுக்க வந்த இடத்தில் ஃப்ரிட்ஜ் வெடித்து மூவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்