Skip to main content

திவாலான கம்பெனி பட்ஜெட் போல தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை! திண்டுக்கல்லில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி!!     

Published on 09/02/2019 | Edited on 09/02/2019
cpm


திவாலான கம்பெனியின் பட்ஜெட் போல தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளது. மக்களின் பிரச்சனைகள் குறித்து எதுவும் இந்த நிதி நிலை அறிக்கையில் சொல்லப்படவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

 

திண்டுக்கல்லில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மேலும் இது குறித்து பேசியதாவது:   ‘’ஓ.பன்னீர்செல்வம் 8வது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இது ஒரு வெற்றுத்தனமான நிதிநிலை அறிக்கையாக உள்ளது. தமிழக மக்கள் சந்திக்கிற எந்த பிரச்சனை பற்றியும் அதில் குறிப்பிடப்படவில்லை. எந்தவிதமான வளர்ச்சித்திட்டங்களும் அதில் கிடையாது. ஒரு திவாலான கம்பெனி ஒரு வரவு செலவு அறிக்கை சமர்ப்பிப்பது போல  பொருளாதார நிதி நிலையில் திவாலான தமிழக அரசின் நிதிநிலை என்பதை தவிர இதில் வேறொன்றும் இல்லை. குறிப்பாக 4 லட்சம் கோடி ரூபாய் இந்த ஆண்டு கடன் உயர்ந்துள்ளது. இந்த கடனுக்காக அரசு 33 ஆயிரம் கோடி ரூபாயை வட்டியாக மட்டும் செலுத்த வேண்டியுள்ளது. அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் போராடும் போது நாங்கள் இவ்வளவு சம்பளம் தருகிறோம், அவ்வளவு சம்பளம் தருகிறோம் என்று இல்லாதை இட்டுக்கட்டி முதலமைச்சரும், அமைச்சர்களும் பேசினார்கள். ஆனால் 33 ஆயிரம் கோடிக்கு வட்டி செலுத்துகிற அளவிற்கு கடனை வாங்கிக் குவிச்சது யாரு என்று பார்த்தால் இன்றுள்ள நிதியமைச்சரும், அரசும், முதலமைச்சரும் தான் காரணம். 

 

பழிவாங்கிய மோடி அரசு மத்திய அரசு ஒரு பாரபட்சமான அணுகுமுறையை கடைப்பிடிப்பதாக இந்த பட்ஜெட்டில் அரசு சொல்கிறது. 14வது நிதிக்குழு சிபாரிசின் அடிப்படையில் நமக்கு வழங்க வேண்டிய நிதிப்பங்கீடு உயர்த்தப்பட்டாலும் கூட வளர்;ச்சியடைந்த மாநிலம் என்ற பெயரில் மிக மோசமாக நாம் பழிவாங்கப்பட்டு இருக்கிறோம். 

 

 நமக்கு நியாயமான நிதி ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை. ஏற்கனவே நமக்கு கொடுக்க வேண்டிய பல்வேறு திட்டங்களுக்கான நிதியைக் கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்குக் கொடுக்கக்கூடிய ஸ்காலர்சிப் பணத்தைக்கூட மத்திய அரசு கொடுக்கவில்லை.

 

 ஜி.எஸ்.டி. பங்கீட்டில் கூட மாநில அரசுக்கு மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ளவில்லை. இது போன்ற மத்திய அரசின் பழிவாங்கக்கூடிய போக்கின் காரணமாகத்தான் இந்த நிதி நெருக்கடி தமிழநாட்டில் ஏற்பட்டிருக்கிறது  என்பதையெல்லாம் நிதி அமைச்சர் பட்ஜெட்டில் தெளிவாக படிக்கிறார். அத்தகைய மோடி அரசாங்கத்தோடு தேர்தலில் உடன்பாடு கொண்டு எந்த முகத்தோடு மக்களிடம் ஓட்டுக்கேட்க வருவீர்கள்.  தமிழகத்திற்கு பாரபட்சமாக நடந்துகொள்ளும் பாஜக அரசோடு ஒரு இணக்கமாக உறவை வைத்துக்கொண்டிருப்பது என்ன நியாயம் என்று கேட்கிறேன். 

 

இந்த ஆண்டுக்கு நீட் தேர்வு வரப்போகிறது. கடந்த ஆண்டு தமிழ் மீடியத்தில் படித்த 5 மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் போய் சேர முடியாத நிலை உள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து கொண்டிருக்கிற இந்த அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி விலக்கு பெற முடியவில்லை. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் முடங்கி 8 லட்சம் பேர் வேலையின்றி முடங்கிக்கிடக்கிறார்கள். பட்டினியாக கிடக்கிறார்கள். அதை பற்றி இந்த பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. சட்டப்படி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பட்ஜெட்டில் எதுவும் இல்லை.  கரும்பு விவசாயம் பற்றி இந்த ஆண்டுக்கு விலை நிர்ணயம் செய்து அறிவிக்கப்படவில்லை. கரும்பு விலையை நிர்ணயித்து அறிவிக்கிற அணுகுமுறையை தமிழக அரசு கைவிட்டுவிட்டது. மத்திய அரசு கரும்புக்கு நிர்ணயம் செய்த விலை மட்டும் தான் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி வைத்துள்ளார்கள். நெல்லுக்கு ஏற்கனவே நிர்ணயித்த விலை தான். புதிய விலை அறிவிக்கவில்லை. 

 

கஜாபுயல் பாதித்த பகுதி மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிவாரணத்தை மீண்டும் வழங்குவதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்த பகுதி மக்கள் மேற்கொண்டு கூடுதலாக நிவாரணம் கேட்டுள்ளனர். அது பற்றியெல்லாம் ஒரு வார்த்தைகூட இல்லை. புயல் பாதித்த 12 மாவட்டங்களில் சுயஉதவிக்குழுக்களில் பெண்கள் வாங்கிய கடனை கட்டமுடியாமல் தவித்து வருகிறார்கள். இந்த கஜா புயலை காரணம் காட்டி பெண்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்தார்கள். அதனைப் பற்றியும் இந்த பட்ஜெட்டில் ஒன்றுமே கிடையாது. தமிழ்நாட்டில் ஒரு கோடி இளைஞர்கள் படித்துவிட்டு வேலையின்றி தவிக்கிறார்கள். அந்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்க ஏதாவது அரசிடம் ஏற்பாடு இருக்கிறதா? அது பற்றியும் ஒன்றும் இல்;லை. அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடினார்கள். இப்ப என்ன சொல்கிறார்கள் என்றால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுலாக்குவது தொடர்பாக 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையிலான கமிசன் அமைத்தோம். அவர்கள் அறிக்கை சமர்ப்பித்தள்ளார்கள். அது பற்றிய பரிசீலிக்கப் போகிறோம் என்று கூறுகிறது அரசு. ஆனால் இந்த போராட்டம் ஆரம்பித்த போது முதலமைச்சரும், மீன்வளத்துறை அமைச்சரும் இந்த கோரிக்கையை ஏற்கவே முடியாது என்று பகிரங்கமாக அறிவித்தார்கள். அது தொடர்பாக பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்தார்கள். பிரசுரமாகி உள்ளது. அந்த விளம்பரத்தில் கூட பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமுலாக்க முடியாது என்று அறிவித்தார்கள். இப்போது அதை பற்றி பரிசீலிப்பதாக எதற்கு சொல்கிறார்கள் என்று புரியவில்லை. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்களை எடுத்துரைத்து இந்த பிரச்சனையில் வாதிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு பக்கம் ஆலையை மூடுவது போல மூடிவிட்டு இன்னொரு பக்கம் உச்சநீதிமன்றம் உத்தரவு என்று திறக்கும் வாய்ப்புள்ளது. இப்படி தமிழக மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர். 8 வழிச்சாலை பிரச்சனை பற்றி சொல்லப்படவில்லை. மேற்கு மாவட்டங்களில் மின் கோபுரங்களுக்கு எதிராக போராடுகிறார்கள். அதனை பற்றியும் பட்ஜெட்டில் ஒன்றும் சொல்லப்படவில்லை. ஆக தமிழ்நாட்டில் மக்கள் போராடுகிற எந்த பிரச்சனையை பற்றியும் எதுவம் சொல்லப்படவில்லை. இப்போது வறட்சி பிரச்சனை எழுந்துள்ளது. மழை இல்லை. அதனால் ஏற்படுகிற வறட்சி பற்றியோ பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கான நிவாரணம் பற்றியோ மாற்றுத்திட்டங்கள் பற்றியோ எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக பார்த்தால் தமிழக மக்களை பற்றி எதுவும் கவலைப்படாத ஒரு பட்ஜெட்டை நாங்கள் பெருமையோடு சமர்ப்பிக்கிறோம் என்று முதலமைச்சர் சொல்வது என்ன நியாயம் என்று கேட்கிறேன். ஆகவே இந்த பட்ஜெட் ஒரு ஏமாற்று பட்ஜெட்.

 

 ஒரு வெத்துவேட்டு பட்ஜெட்.  இந்த பட்ஜெட்டால் எந்த பலனும் ஏற்பட போவதில்லை என்பது தான் சிபிஎம் கருத்து என்பதை கூறுகிறோம்.   கூட்டணி குறித்து ஏற்கனவே சொல்விட்டோம். தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதிமுகவை வீழ்த்துவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக உள்ளிட்ட கட்சிகளோடு தொகுதி உடன்பாடு செய்துகொள்வது என்பது ஏற்கனவே நாங்கள் தீர்மானித்துள்ளோம். அது தொடர்பாக பேச்சுவார்த்தை எல்லாம் நல்லமுறையில் முடியும் என்று கருதுகிறோம். இன்னும் பேச்சுவார்த்தை துவங்கவில்லை. எதிரணியில் உள்ளவர்கள் தான் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. பட்ஜெட்டில் இவ்வளவு மோசமாக பிஜேபி அரசாங்கத்தை பேசிவிட்டு  அந்த கட்சியோடு சேர்ந்து ஓட்டுக் கேட்கப் போனால் அந்த கூட்டணிக்கு மக்களிடம் ஓட்டு கேட்க என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்று கேட்கிறேன்.  பொதுக்கூட்டத்தில் பாஜகவை பற்றி பேசினால் அது வேறு விசயம். ஆனால் அரசாங்கத்தின் ஆவணமாக உள்ள பட்ஜெட்டில் மத்திய அரசாங்கம் தமிழகத்திற்கு எவ்வளவு பாரபட்சமாக இருக்கிறது என்று எழுதி வைத்துவிட்டு  அந்த பாஜகவுடன் கூட்டணி வைத்து ஓட்டுக்கேட்க போனால் எப்படியிருக்கும்? 
பாஜக மற்றும் அதிமுக கூட்டணி மூழ்கும் கப்பலாகும். அந்த  கட்சிகளோடு இன்னும் சில கட்சிகள் இந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்கப் போவதாக கூறப்படுகிறது. அதிமுக பாஜக கட்சிகளோடு கூட்டு சேரும் சில  கட்சிகளும் மூழ்கி போகும் என்பது தான் உண்மை.  மத்திய மாநில அரசுகளை விமர்ச்சிக்கும் சேனல்களை தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் ஒளிபரப்புவதில்லை. எடப்பாடி பழனிச்சாமியை பற்றி பேசினால் முதல் வரிசையில் இருந்த சேனலாக இருந்தால் அதை தூக்கி கடைசியில் யாரும் பார்க்காத வண்ணம் போடுவது. அந்த சேனல்களை இருட்டடிப்பு செய்வது. அரசு கேபிள் டி.வியில் உள்ள அனைத்து சேனல்களையும் கட்டண சேனல்களாக மாற்றி உள்ளனர். டிஜிட்டலில் தான் வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர் மத்திய அரசாங்கம் கார்பரேட் மயமாக்கும் பின்னணியில்  இந்த நடவடிக்கைகளை   மேற்கொள்கிறார்கள். இதற்கெல்லாம் காரணமான மத்திய பாஜக அரசை மாநில அரசு கேட்கும் நிலையில் இல்லை. மத்திய அரசு எதைச் செய்தாலும் ஆமாம் சாமி போடும் மாநில அரசாக அதிமுக அரசு உள்ளது என்று கூறினார். 

 

பேட்டியின் போது மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.பாலபாரதி மற்றும் காமராஜ், என்.பாண்டி உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் இருந்தனர்!


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.