
தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம் அமலில் உள்ளது. அதேபோல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த முழு பொதுமுடக்கம் மேலும் 7 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,280 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக 4000 பேரை கடந்து கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 65 பேர் உயிர் இழந்ததால் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,450 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,07,001 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 44,959 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,842 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 5 நாட்களாக இரண்டாயிரத்துக்கும் மேல் பாதிப்பு பதிவான நிலையில் இன்று குறைந்துள்ளது. இதனால் சென்னையில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 66,538 ஆக அதிகரித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அரசு மருத்துவமனைகளில் 47 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,450 அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 35 ஆவது நாளாக கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் தொடர்ந்து வருகிறது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனாவால் 417 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் அதிகபட்சமாக சென்னையில் 1,033 பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 111 பேரும், திருவள்ளூரில் 84 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 60,592 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் 56.62 சதவீதமாக உள்ளது.
அதிகபட்சமாக மதுரையில் இன்று மட்டும் 280 பேருக்கு கரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மதுரையில் மொத்தம் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,703 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் மதுரையில் கரோனாவால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 169 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 106 பேர் இதுவரை கரோனாவால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர். 3,313 பேர் குணமடைந்து இதுவரை வீடு திரும்பியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 127 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,500 நெருங்கி வருகிறது. மேலும் திருவள்ளூரில் இதுவரை 82 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 125 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,268 அதிகரித்துள்ளது. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் முழுவதும் செய்யப்பட்ட பரிசோதனையில் இன்று 74 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 719 ஆக அதிகரித்துள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும் இன்று 49 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 65 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. தற்போது வரை தேனி மாவட்டத்தில் 992 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 753 பேர் சிகிச்சையில் உள்ளனர். 234 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கரோனாவிற்கு தேனியில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் முதல் முறையாக 100க்கும் அதிகமானோர் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் அங்கு 106 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 807 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், சென்னையில் தொடர்ந்து கரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் ஒரே நாளில் இன்று 2,400 க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு உச்சத்தை தொட்டுள்ளது.