
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி மனிதச் சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது. லட்சகணக்கான மக்கள் இந்நோய்க் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் கரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களில் முதலில் தி.மு.க. உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி சில வாரங்களுக்கு முன் மரணமடைந்தார். அடுத்து தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மஸ்தான், கணேசன் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
சிலர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மற்ற உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், கிருஷ்ணகிரி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவனுக்கு நேற்று காலை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் 2 மணி அளவில் மேலூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை ராணிபேட்டை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் காந்திக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரே நாளில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.