Skip to main content

சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம்; முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

Consultative meeting on law and order Chief Minister M.K. Stalin's action order

 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10வது தளத்தில் தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “அடுத்து வரும் ஒரு ஆண்டுக் காலம் நமக்கு மிகவும் முக்கியமானதாகும். இக்காலகட்டத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் மேலும் சிறப்பாக அமைவதற்குப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன். சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் கண்டறியப்பட்டவுடன் முறையாக முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அவை மக்களுக்குப் பிரச்சனை ஏற்படுத்தும் வண்ணம் பெரிய நிகழ்வாக உருமாறுவதைத் தவிர்க்க வேண்டும். அடுத்த ஓராண்டுக் காலம் மக்களுக்குச் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணம் உறுதி செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதால் காவல்துறை அதிகாரிகள் மிக மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

 

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் விசாரிக்கப்படும்போது கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். அவர்களை எந்த விதத்திலும் துன்புறுத்தக்கூடாது. காவல் மரணங்கள் முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும். திமுக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் எப்போதும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான பெண் குழந்தைகள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று வருகிறார்கள். அதே போன்று வேலைக்குச் செல்லும் பெண்களும் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளனர். கல்விக்கூடங்கள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது  காவலர்களின் தலையாய கடமை ஆகும். பொதுமக்கள் மற்றும் பெண்களிடம் இருந்து பெறப்படும் ஒவ்வொரு புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனையடுத்து என்னுடைய அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட நிர்வாகம், காவல்துறையினரின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மற்றும் கடும் நடவடிக்கைகளால் தற்போது கள்ளச் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்த நிலை தொடர, தொய்வின்றி கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக அகற்றுதலை உறுதி செய்திட வேண்டும். இது குறித்து வாரம்தோறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்திக் கண்காணிக்க வேண்டும். மக்களிடமிருந்து பெறப்படக்கூடிய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பொழுது நடுநிலைமை தவறாமல் இருத்தல் வேண்டும். புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு விருப்பு வெறுப்பு இல்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் அங்கேயே பேசி முடித்துக் கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும்.

 

Consultative meeting on law and order Chief Minister M.K. Stalin's action order

 

போதை மருந்து நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். போதை என்பது அதனைப் பயன்படுத்தும் தனிமனிதரின் பிரச்சனை அல்ல. அது சமூகப் பிரச்சனை. போதை என்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என்று சொல்வதற்குக் காரணம், சமூகத்தில் குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்பதும்தான். போதைதான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்குத் தூண்டுதலாக இருக்கிறது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் போதை மருந்துகளைப் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.யும் தங்களது மாவட்டத்துக்குள் போதை விற்பனையை முற்றிலுமாகத் தடை செய்து விட்டேன் என்று மார்தட்டிச் சொல்லும் அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். சாதி, மத ரீதியான மோதல்களைத் தடுப்பது ஒரு பக்கம் என்றால், சமூக இணையத் தளங்களின் மூலமாகச் சாதி, மத ரீதியான வன்மங்களைப் பரப்புபவர்கள் அதிகமாகி வருகிறார்கள். அவர்களைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள்தான் சமூக அமைதியைக் கெடுக்க காரணமாக இருக்கிறார்கள். அவர்களால் அப்பாவிகள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் சொகுசாக உட்கார்ந்து கொண்டு இதுபோன்ற வன்மங்களை விதைப்பவர்கள் தப்பி விடுவார்கள். இப்படி நச்சுக் கருத்துகளைப் பரப்புபவர்களைக் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை என்பது நடந்த குற்றங்களைக் கண்டுபிடிக்கும் துறையாக மட்டுமல்லாமல், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் துறையாகச் செயல்பட வேண்டும்.

 

கடந்த ஆண்டை விடக் கடந்த மாதத்தை விடக் குற்றம் குறைந்திருக்கிறது என்கிற புள்ளி விவரம் வேண்டாம். குற்றமே நடைபெறவில்லை என்ற முற்றுப்புள்ளி விவரமே தேவை என்பதை அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். உள்துறைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகிய இருவரும் நான் மேலே கூறிய அறிவுரைகள் அனைத்தும், விடுதல் இன்றி மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு மாதமும் அனைத்து காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆணையர்களுக்கு இணைய வழியே ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி அனைத்து அறிவுரைகளையும் முழுமையாகச் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்” எனக் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழக டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்