
கோவை மாவட்ட ஆட்சியராக கீ.சு. சமீரன் இன்று (17.06.2021) ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னாள் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அதற்கான பொறுப்பு ஆவணங்களை சமீரனிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தொற்று விகிதத்தைத் தரை மட்டத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடந்த மாதம் 4 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்த தொற்று, முதலமைச்சரின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் 1,500 என்ற அளவில் குறைந்துள்ளது. இதற்கு கோவை பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்கியுள்ளனர். பொதுமக்கள் இன்னும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். தற்போது ஊரகப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி குறைந்துள்ள நிலையில், கூடிய விரைவில் அனைவருக்கும் தடுப்பூசிகளைக் கொண்டு சேர்க்கும் பணி மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.