
கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோவை மாநகர போலீசார் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஐ.எஸ். ஆதரவு மனநிலையில் உள்ள நபர்களைக் கண்டறிந்து அவர்களின் தொடர் செயல்பாட்டை கண்காணிக்கத் தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக கோவையில் 200 பேர் தொடர்ந்து போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கோவை கார் வெடிப்பு தொடர்பான வழக்கில் மேலும் நான்கு பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் நேற்று 21 இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையின் போது முக்கிய ஆவணங்கள், மின்னணு சாதனங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். ஆறு லேப்டாப்கள், 25 மொபைல் போன்கள், 34 சிம்கார்டுகள், இரண்டு எஸ்டி கார்டுகள், மூன்று ஹார்டு டிஸ்க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது மேலும் நான்கு பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.