Skip to main content

குவைத் தீ விபத்து; முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Chief Minister MK Stalin meeting for Kuwait fire incident

குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் நேற்று (12.06.2024) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த கட்டடத்திலிருந்த 195 பேரில் 175 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியானது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் தான் இந்தத் தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் என்பவரின் நிலை குறித்தும் தெரியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவர் அங்குள்ள தரக் கட்டுப்பாட்டு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். 

Chief Minister MK Stalin meeting for Kuwait fire incident

இந்நிலையில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தீ விபத்து சம்பவம் குறித்து முதலமைச்சருக்கு விளக்கி வருகிறார். இந்தத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்ததாக தற்போது தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘பள்ளிகளில் தொழில் முனைவு குறித்த பாடத் திட்டம்’ - அமைச்சர் உதயநிதி அறிவிப்பு!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
'Entrepreneurship Curriculum in Schools' - Minister Udayanidhi Announcement

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்று (27.06.2024) சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்போது அத்துறையின் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு மகளிர் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிக்காக ஒருங்கிணைந்த மையம் அமைக்கப்படும். நான் முதல்வன் திட்டம், தமிழ்நாடு மகளிர் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். அரசின் முக்கிய திட்டங்களைக் கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கண்காணிப்பு அலகு ஏற்படுத்தப்படும். ஒரு புள்ளி இயல் அலுவலர் மற்றும் புள்ளி இயல் ஆய்வாளர் கொண்டு அந்தந்த மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குநர் கீழ் செயல்படும். 

'Entrepreneurship Curriculum in Schools' - Minister Udayanidhi Announcement

முதலமைச்சரின் கனவுத்திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் திறன் சார்ந்த படிப்புகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 45 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் துணை மருத்துவ படிப்புகளுக்கு விரிவுபடுத்தப்படும். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறந்த 1000 மாணவர்களுக்குத் திறன் பயிற்சி அளித்து உயர் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு துறை சார்ந்த திறன் பயிற்சிகள் சிறந்த தொழில் முறை பயிற்றுநர்கள் மூலம் வழங்கப்படும்.

தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் முதற் கட்டமாக 8 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். அதில் மகளிருக்குப் பயனளிக்கும் அனைத்து தகவல்களைத் தரும் மகளிர் தகவல் வங்கி உருவாக்கப்படும். அரசு பள்ளிகளில் 8 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு உளவியல் பரிசோதனை மூலம் திறமைகளைக் கண்டறிய திறமை மதிப்பீட்டு தளம் உருவாக்கப்படும். பள்ளிகளில் தொழில் முனைவு குறித்த பாடத் திட்டம், அரசு கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவிகளுக்கு தொழில் துறை சார்ந்த பணியிட பயிற்சி அளிக்கப்படும்” எனத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

Next Story

‘பாரம்பரியத் தற்காப்புக் கலைப் பயிற்சி மையம் அமைக்கப்படும்’ - அமைச்சர் உதயநிதி!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
'Traditional martial arts training center will be set up' - Minister Udayanidhi

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்று (27.06.2024) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்போது அத்துறையின் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பல்வேறு அறிவுப்புகளை வெளியிட்டார். அதில், “சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் உள்ள மாணவர் விடுதி ரூ. 25 கோடி மதிப்பீட்டில் உயர் செயல்திறன் விடுதியாக மேம்படுத்தப்படும். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பாகப் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்டும். அதாவது 100 வீரர் வீராங்கனைகளுக்கு 3% விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணி ஆணை வழங்கப்படும். 

'Traditional martial arts training center will be set up' - Minister Udayanidhi

ரூ.100 கோடியில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். இந்தியாவிலே முதல் முறையாக தமிழ்நாடு உடற் கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் நிறுவப்படும். ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின்கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களும் விளையாட்டு அரங்கங்களும் சீரமைக்கப்படும்.

ரூ.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 22 சட்டமன்றத் தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும். மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில் ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் அமைக்கபடும். தென் தமிழ்நாட்டைச் சார்ந்த நீச்சல் வீரர் - வீராங்கனைகள், சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்படும். ரூ.10 கோடியில் மதிப்பீட்டில் மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களிலும் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். 

'Traditional martial arts training center will be set up' - Minister Udayanidhi

மாவட்ட விளையாட்டு வளாகத்தில் தற்போதுள்ள ஹாக்கி ஆடுகளம் செயற்கை இழை ஆடுகளமாகத் தரம் உயர்த்தப்படும். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மாணவர்கள் பங்கேற்பதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையாக இது அமையும். கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழர் பாரம்பரியத் தற்காப்புக் கலைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். அதன்படி களரி, அடிமுறை, சிலம்பம், சுவடுமுறை, மல்யுத்தம், குத்துவரிசை, அடிதடை, வர்மம் போன்ற தென் தமிழ்நாட்டின் பாரம்பரியத் தற்காப்புக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் சீரிய முயற்சி ஆகும்” எனத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.