Skip to main content

லாரி மோதி சிறுமி பலி; மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி 

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

Chengalpattu girl has passed away by Lorry accident

 

செங்கல்பட்டு மாவட்டம் கோவிலம்பாக்கம் அடுத்த நன்மங்கலம் ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாய் வெங்கடேஷ் (36). இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணமாகி கீர்த்தி (30) என்ற மனைவியும், லியோரா ஸ்ரீ (10) என்ற மகளும் உள்ளனர்.  கீர்த்தி சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவர் பணிபுரியும் அதே பள்ளியிலேயே அவரது மகள் லியோரா ஸ்ரீ 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

 

இந்த நிலையில், நேற்று கீர்த்தி வழக்கம்போல் தனது மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். கோவிலம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் அந்த சாலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாகனங்கள் மெதுவாகச் சென்றன. இந்நிலையில், கீர்த்தி கோவிலம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பெட்ரோல் பங்க் எதிரே சென்றார். அப்போது வாகனம் சாலையில் உள்ள குழியில் ஏறி இறங்கியது. இதனால், நிலை தடுமாறிய லியோரா ஸ்ரீ வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி லியோரா ஸ்ரீ மீது ஏறி இறங்கியது. இதனால், லியோரா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

ஆனால், இதை கவனிக்காத லாரியின் ஓட்டுநர் தொடர்ந்து லாரியை இயக்கினார். உடனே சாலையில் சென்ற பொதுமக்கள் கூச்சலிட்டனர். அதன்பிறகு, லாரியின் ஓட்டுநர் லாரியை நிறுத்தி அந்த இடத்தை விட்டுத் தப்பிச் சென்றார். அதனைத் தொடர்ந்து, இந்த சாலையில் இதுபோன்ற தண்ணீர் லாரிகள் அதிவேகமாக வருவதாகவும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்யும்படியும் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பலியான லியோரா ஸ்ரீயின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கு இருந்து சென்றனர்.

 

பின்னர், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்றவர் மன்னார்குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் டேவிட்ராஜன் (28)  என்பது தெரியவந்தது. தப்பிச் சென்ற டேவிட்ராஜனை மேடவாக்கம் பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.

 

அதனைத் தொடர்ந்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த லியோரா ஸ்ரீயின் உடலுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “விபத்து நடந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் ஒரு சில இடங்களில் தடுப்புகள் போடப்பட்டுள்ளது. இதனால், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, எங்கு எல்லாம் பணிகள் முழுமை அடைந்துள்ளதோ அந்த பகுதி சாலையில் உள்ள தடுப்புகளை சிறிய அளவில் அகற்றி சாலையைக் கடப்பதற்கான ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளோம். மேலும், தண்ணீர் லாரி எடுத்துச் செல்லக்கூடிய வாகனங்கள் சட்டவிரோதமாகச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விபத்தில் தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது. 

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்