Skip to main content

விஷச்சாராய விவகாரம்; மத்திய மண்டல போலீஸ் ஐஜி எச்சரிக்கை

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

central zone police ig karthikeyan about illegal liquor 

 

செங்கல்பட்டு, மரக்காணம் பகுதிகளில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த நிலையில் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த கள்ளச்சாராய விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

 

இந்நிலையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தெரிவிக்கையில், "01.01.2023 முதல் 16.05.2023 வரை திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் கள்ளத்தனமாக சில்லறை மது விற்பனை செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 1,43,793 லிட்டர் பாண்டிச்சேரி சாராயமும் (தஞ்சாவூர் 989 லிட்டர், திருவாரூர் - 14,812 லிட்டர், நாகப்பட்டினம் - 76,960 லிட்டர் மற்றும் மயிலாடுதுறை 51,030 லிட்டர்) 1,220 லிட்டர் கள்ளச் சாராயமும், 11,254 லிட்டர் சாராய ஊரல்களும் மற்றும் 1,980 லிட்டர் கள்ளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, 28,617 லிட்டர் சில்லறை விற்பனை செய்த IMFL மதுபானங்கள் மற்றும் 441 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் கள்ளச்சாராயம் விற்ற 31 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

கடந்த 3 நாட்களாக 14.05.23-ம் தேதி முதல் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மது வகைகளை ஒழிக்கும் சிறப்பு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில எல்லையில் உள்ள மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையில் நிரந்தரமாக உள்ள 8 மாநில எல்லை சோதனைச் சாவடிகளுடன் கூடுதலாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டும், கண்காணிப்பு ரோந்து வாகனங்கள் நியமிக்கப்பட்டும் தீவிர கண்காணிப்பு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

 

கடந்த மூன்று நாட்களில் 14.05.2023 முதல் மத்திய மண்டலத்தில் மொத்தம் 959 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் (திருச்சி -102, புதுக்கோட்டை -90, கரூர் - 159, பெரம்பலூர் 73. அரியலூர் 70, தஞ்சாவூர் 149, திருவாரூர் 143, நாகப்பட்டினம் 96 மற்றும் மயிலாடுதுறை 77) 962 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவற்றில் 19,162 லிட்டர் பாண்டிச்சேரி சாராயமும், 102 லிட்டர் கள்ளச் சாராயமும், 1389 லிட்டர் சாராய ஊரல்களும் மற்றும் 450 லிட்டர் கள்ளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, 1268 லிட்டர் சில்லறை விற்பனை செய்த IMFL மது வகைகளும் மற்றும் 15 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

மேலும் கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி சாராயங்கள் புழக்கத்தில் உள்ளதை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர் தேடுதல் வேட்டை தொடரும் என்றும், கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்