Skip to main content

“முழுமையான நிவாரணம் வழங்கிட மத்திய அரசு முன்வர வேண்டும்” - துரை வைகோ

Published on 20/12/2023 | Edited on 21/12/2023
The central government should come forward to provide complete relief Durai Vaiko

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மாநிலப் பேரிடர் மீட்புக் குழு, தேசியப் பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கிட மத்திய அரசு முன்வர வேண்டும் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வங்கக் கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சியால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்கள் பெருமழையால் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. விருதுநகர் உள்ளிட்ட இதர சில மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகள், பெருமழையால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

நான்கு தென் மாவட்டங்களிலும் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நகர்ப்புற பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை முழுமையாகவோ, பகுதியாகவோ இழந்துள்ளனர். கிராமப்புறங்களில் பல நூற்றுக்கணக்கான மக்களின் வீடுகள் முழுமையாகவோ, பகுதியாகவோ சேதம் அடைந்துள்ளன. விவசாயிகளின் நெல் வயல்கள் நீரில் மூழ்கி, முழுமையாக நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. மக்காச்சோளம், உளுந்து, பாசி, வாழை போன்ற பணப்பயிர்கள் சாய்ந்தும் நீரில் மூழ்கியும், அறுவடை செய்ய முடியாத அளவுக்கு முழுமையாக சேதம் அடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் தாங்க முடியாத வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

The central government should come forward to provide complete relief Durai Vaiko

கிராம சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் காட்டாற்று வெள்ளத்தால் பலத்த சேதம் அடைந்துள்ளன. விவசாயிகளின் பல்வேறு பயிறு வகைகள், காய்கறிகளை சந்தைப்படுத்த முடியாமல் நட்டம் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலையில், அவர்கள் தங்கள் வருவாய் ஆதாரத்தை இழந்துள்ள நிலையிலும், தங்களின் படகுகளைக் கொண்டு வந்து மக்களை காக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். வர்த்தகம் முழுமையாக முடங்கியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள உப்பளங்கள் நீரில் மூழ்கிவிட்டது.

விவசாயிகள், விவசாயக் கூலி வேலை செய்யும் மக்கள் வேலை இழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் இயல்பு நிலை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு அறிக்கைகளாலும், கணிக்க முடியாத பெரும் மழை கொட்டும் நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் நேரடிக் கண்காணிப்பில், பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், அரசுத் துறையினர், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்பினர் முழு வீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

The central government should come forward to provide complete relief Durai Vaiko

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரை நேற்று (19.12.2023) நேரில் சந்தித்து பெருவெள்ள சேதத்திற்கு இழப்பீடு கோரியுள்ளார். மத்திய அரசு உடனடியாக மத்திய ஆய்வுக் குழுவினை அனுப்பி, வரலாறு காணாத வகையில் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள, தென் மாவட்டங்களின் சேத நிலவரத்தை முழுமையாக கணக்கிட்டு, தமிழ்நாடு அரசு கூறும் நிவாரணத்தை முழுமையாக விடுவித்திட வேண்டும். மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததற்கு விவசாயிகளுக்கு இழப்பீடும், காப்பீட்டுத் தொகையும், வீடு இழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு கட்டித் தருவதற்கும், சேதமடைந்த விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்குவதற்கும், சேதமடைந்த சாலைகள், குளங்களை முழுமையாக சீரமைப்பதற்கும் முன்னுரிமை வழங்கி நிவாரணம் வழங்கிட முன்வருமாறு, மத்திய அரசையும், தமிழ்நாடு அரசையும் மதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister MK Stalin praises chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில்  இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார்.