Skip to main content

பா.ஜ.க. நிர்வாகி கேசவ விநாயகத்திடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை!

Published on 07/10/2024 | Edited on 07/10/2024
CbCID Officials investigate to BJP executive Kesava Vinayagam

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பா.ஜ.க. உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகளான நயினார் நாகேந்திரன், எஸ்.ஆர். சேகர், கேசவ விநாயகம் என 15க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர்.

இந்நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்த வழக்கில், எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் இன்று (07.10.2024) காலை 11 மணியளவில் இரண்டாவது முறையாக ஆஜரானார். அப்போது அவரிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். 

சார்ந்த செய்திகள்