Skip to main content

வீடியோ வெளியிட்ட ஷர்மிளா; பல்வேறு பிரிவுகளில் பாய்ந்த வழக்குகள்

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Cases filed against driver Sharmila for criticizing female police

கோவை மாவட்டம் வடவள்ளிப் பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. 26 வயதான இவருக்கு தனது சிறுவயதில் இருந்தே வாகனங்கள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. அதன் நீட்சியாக, 2019 ஆம் ஆண்டில் இருந்து ஆட்டோ ஓட்டி வந்த ஷர்மிளா, கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்று, உரிமமும் பெற்றுள்ளார். 

இந்நிலையில், கடந்தாண்டு மார்ச் மாதத்தில் விவி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் பேருந்தை ஓட்டி வந்த ஷர்மிளா, பயணிகள் மத்தியிலும் சோசியல் மீடியாவிலும் அதிகளவில் பிரபலமாக தொடங்கினார். அதே சமயம், கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளாவிற்கு தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள், அரசியல் தலைவர்கள் என ஷர்மிளாவை நேரில் சந்தித்து அவருடன் பேருந்தில் பயணம் செய்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, அந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஷர்மிளாவுக்கு அந்த வேலை மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. கடந்த ஜூன் மாதத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரான கனிமொழி ஷர்மிளாவின் பேருந்தில் ஏறி அவருடன் பயணம் செய்தார். 

இத்தகைய சூழலில், அந்தப் பேருந்தில் இருந்த பெண் கண்டக்டர் ஒருவர், கனிமொழி வந்த நேரத்தில் முகச்சுளிப்புடன் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஷர்மிளாவுக்கும் அவரது பஸ் உரிமையாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ஷர்மிளா தனது ஓட்டுநர் பணியை துறந்தார். இந்நிலையில், இச்செய்தியை தெரிந்துகொண்ட நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், ஓட்டுநர் பணியை இழந்த ஷர்மிளாவுக்கு புதிய கார் ஒன்றைப் பரிசாக வழங்குவதாகவும், இனி வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவோராக ஷர்மிளா தனது பயணத்தை தொடர்வார்" எனத் தெரிவித்திருந்தார். 

அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கமல்ஹாசனை நேரில் சந்தித்த ஷர்மிளா, அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார்.  இத்தகைய சூழலில், தற்போது கால் டாக்ஸி ஓட்டி வரும் ஷர்மிளா, இன்ஸ்டாகிராம், யூடிப் உள்ளிட்ட சோசியல் மீடியா தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். தான் வாகனங்கள் ஓட்டி வருவதையும் பிரபலங்களுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு அதிக லைக்ஸ்களை பெற்று வந்தார். 

அந்த வகையில், கடந்த 2ம் தேதியன்று கோவை மாவட்டம் சத்தி ரோடு சங்கனூர் சந்திப்பு அருகே தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சி1 காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி வாகன நெரிசலை சீர் செய்துகொண்டிருந்தார். 

இதனிடையே, அங்கு காரில் சென்றுகொண்டிருந்த ஷர்மிளா, போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, எஸ்.ஐ ராஜேஸ்வரி காரில் வந்த ஷர்மிளாவிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, அதனை வீடியோ எடுத்த ஷர்மிளா, "இந்த வீடியோல இருக்குற லேடி போலீஸ் வந்து வரப்போற வண்டியிலா வழிமறிச்சி. அவங்க கிட்ட ஃபைன் எதுவும் போடாம.. காசு வாங்குறாங்க. அதுவும் இல்லாம டிரைவர கெட்ட வார்த்தைல திட்டுறாங்க. இவங்க மேல ஆக்ஷன் எடுக்கணும். இதை எல்லாரும் ஷேர் பண்ணுங்க" என பெண் போலீசை கடுமையாக விமர்சித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

தற்போது இந்த வீடியோ வைரலான நிலையில், ஷர்மிளா தவறான நோக்கத்துடன் வீடியோ பதிவிட்டதாக கூறி எஸ்.ஐ. ராஜேஸ்வரி சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ஷர்மிளா மீது  IPC 506(i), 509, 66C information technoloy act இன் கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இச்சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.