Skip to main content

காரைக்காலில் விஷம் கொடுத்து சிறுவன் கொலை; வழக்கில் புதிய திருப்பம் 

Published on 06/09/2022 | Edited on 06/09/2022

 

Case of boy poisoning in Karaikal; A new twist

 

காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள சிறுவனும் அதே பள்ளியில் அந்த மாணவி உடன் ஒரே வகுப்பில் படித்து வருகிறார். மாணவியை விட மாணவன் மிகவும் திறம்பட படித்து வந்துள்ளார். தேர்வில் அந்த மாணவனே அதிக மதிப்பெண் எடுத்துவந்துள்ளார். இது மாணவியின் தாயாரான ராணிக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

 

இதனால் தன்னுடைய மகள்  சிறுவனை விட குறைவான மதிப்பெண் எடுப்பதை விரும்பாத அவர், சிறுவனை அழைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். நண்பரின் தாயார் தானே என்று அவரும் விஷம் கலக்கப்பட்டிருப்பதை அறியாமல் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுவன் மயக்கமடையவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் தற்போது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவியின் தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

முதலில் பள்ளி முடிந்து வீட்டுக்கு  வந்த மாணவனின் உடல் சோர்வாக இருந்ததால் வீட்டில் இருந்தோர் அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு இருந்த மருத்துவர்கள் சிறு மருந்துகளை கொடுத்து  மாணவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இரவில் மீண்டும் மாணவர் சோர்வாக காணப்பட்டதால் மீண்டும் அதே மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து சென்றனர். இதனிடையே மருத்துவமனையில் சேர்த்து கிட்டத்தட்ட 24 மணி நேரங்களுக்குள் சிறுவன் உயிரிழந்துள்ளார். காவல் துறையினர் குற்றவாளியை கைது செய்தாலும் காரைக்கால் அரசு மருத்துவமனையின் அலட்சியப்போக்குதான் மாணவனின் மரணத்திற்கு காரணம் என சொல்லப்பட்டது.

 

பல்வேறு அமைப்புகள் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் சிறுவன் மரணம் தொடர்பான முழு விபரத்தையும் கண்டறிய குழந்தைகள் நல மருத்துவர் முரளி தலைமையில் மூன்று  பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது புதுச்சேரி அரசு. மருத்துவக்குழு, மாணவன் சேர்க்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காரைக்காலில் மருத்துவர் செவிலியர் உள்ளிட்ட 30க்கும் அதிகமானோர் பணியில் இருந்தாலும் அவர்கள் புதுச்சேரியிலேயே பணிபுரிகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மாணவன் மரணம் தொடர்பான முழு விபரத்தையும் கண்டறிய மருத்துவக்குழு காரைக்கால் சென்றுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்