Skip to main content

குடும்பப் பெண்ணுக்குத் தொடர்ச்சியான தொந்தரவு; இளைஞர் மீது வழக்கு 

Published on 03/11/2022 | Edited on 03/11/2022

 

case against young man who continuously torture married woman

 

ஸ்ரீ வில்லிபுத்தூரை அடுத்துள்ள கொத்தன்குளத்தில் வசிக்கும் தன்ஷிகா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளோடு வசித்து வருகிறார். அவருக்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துகுமார். தன்ஷிகாவைத் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வந்ததால், ஏற்கனவே வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு, தன்ஷிகா தரப்பில் கண்டித்து அனுப்புமாறு கூறியதைத் தொடர்ந்து காவல்துறையினர் கண்டித்தனர்.

 

அதன்பிறகும் தன்ஷிகாவைப் பார்க்கும் போதெல்லாம்  “ஏன் பேசமாட்டேங்கிற?” என்று முத்துகுமார் கேட்பது தொடர்ந்திருக்கிறது. கடந்த 1ம் தேதி தன்ஷிகாவின் கையைப் பிடித்து முத்துகுமார் இழுக்க “கையை விடு...” என்று சத்தம் போட்டிருக்கிறார் தன்ஷிகா. உடனே அங்கு வந்த  தன்ஷிகாவின் அப்பா ராதாகிருஷ்ணனும் அம்மா வேலம்மாளும் சித்தப்பா தங்கேஸ்வரனும் “ஏன் இப்படி பண்ணுற?” என்று கேட்க,  “நீ எங்கிட்ட பேசலன்னா வெட்டிக் கொன்று விடுவேன்...” என்று மிரட்டி விட்டு ஓடியிருக்கிறார்.

 

தன்ஷிகாவின் அப்பாவும் அம்மாவும் “ஏற்கனவே இவன் போலீஸ்கிட்ட சொல்லியும் திருந்தவில்லை. மாறி மாறி பிரச்சனை பண்ணுறான். ஊர்க்காரங்ககிட்ட சொன்னாத்தான் இதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்...” என்று சொல்லியிருக்கின்றனர். முத்துகுமாரின் தகாத செயலால் அடிக்கடி அவஸ்தைக்கு ஆளான  தன்ஷிகாவே “இவன் ஊர்க்காரங்க பேச்சை கேட்கமாட்டான்...” எனக் கூறி வன்னியம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் முத்துகுமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவாகியிருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்