![Cannabis crop in the agricultural garden!](http://image.nakkheeran.in/cdn/farfuture/MTZ5tGAHBfEO-Jr2QmnQ0ODIqhyY00mMPoGSL-vDbTI/1633001947/sites/default/files/inline-images/th-1_1925.jpg)
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப் பகுதியில் உள்ள கோயில் நத்தம் என்ற கிராமத்தில் கஞ்சா செடி பயிரிட்டு இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகனுக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் கோயில் நத்தம் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த சிவமூர்த்தி, மகாதேவன் ஆகிய இருவரும் தங்களது விவசாய தோட்டத்தில் ஊடு பயிராகக் கஞ்சா பயிரிட்டு இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் அவர்களது தோட்டத்தில் பயிரிட்டு இருந்த 11 கிலோ கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பர்கூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட சிவமூர்த்தி மற்றும் மகாதேவன் இருவரும் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு ஈரோடு மாவட்ட கோபிசெட்டிபாளையம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.