Skip to main content

கட்டுக் கட்டாக மூட்டையில் பணம்... போலீசாரிடம் சிக்கியது எப்படி..? 

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

Bundle of money; How did the police get caught

 

திருச்சி மாவட்டம், திருச்சி பெரிய கடைவீதி பகுதியில் உள்ள நடு குஜிலி தெருவில் அமைந்திருக்கும் ஒரு தனியார் கடையில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

 

இதையடுத்து போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் உள்ளிட்ட போலீசார், திருச்சி பெரிய கடைவீதி பகுதி, நடு குஜிலி தெருவில் உள்ள அந்தக் கடையில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா? என அதிரடி சோதனை நடத்தினர். ஆனால், அந்தச் சோதனையில் புகையிலை பொருட்களுக்குப் பதிலாக ஒரு சாக்குப் பையில் கட்டுக்கட்டாக ரூ. 10 லட்சத்து 41 ஆயிரம் பணம் இருந்ததைக் கண்டுபிடித்தனர். 

 

அந்தப் பணமூட்டையைக் குறித்து காவல்துறையினர் கேட்டபோது, முரணான தகவலைத் தெரிவித்துள்ளனர். அந்தப் பணத்திற்கு சரியான முறையில் கணக்கு காட்டாததால் கடையில் இருந்த மகேந்திரகான், மகேந்திரகுமார், இக்பால்கான், அன்சாரி, வீரமணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், கடையிலிருந்து கைப்பற்றிய பணத்தை திருச்சி கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

 

இந்தப் பணத்திற்கான சரியான கணக்கை கடை உரிமையாளர் காட்டினால், அந்தப் பணம் திரும்ப அவரிடமே கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதுகுறித்து வருமான வரித்துறைக்கும் தகவல் தெரியவந்துள்ளதால், வருமான வரித்துறையினரும் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்