Skip to main content

சொத்து தகராறு; தம்பியை அரிவாளால் வெட்டிக் கொன்ற அண்ணன்

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

brother passed away  his younger brother due to a property dispute
பழனி

 

காவேரிப்பட்டணம் அருகே, சொத்து தகராறில் தம்பி என்றும் பாராமல் அண்ணனும், அவருடைய மகன்களும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சுண்டேகுப்பம் கீழாண்டி கொட்டாயைச் சேர்ந்தவர் பூவன். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி கோவிந்தம்மாள். இவருக்கு பாலகிருஷ்ணன் (49) என்ற மகனும், இரண்டாவது மனைவி பச்சையம்மாளுக்கு பழனி (48) என்ற மகனும் உள்ளனர்.  

 

தந்தையின் நிலத்தை பிரித்துக் கொள்வது தொடர்பாக பாலகிருஷ்ணன், பழனி ஆகியோருக்கு இடையே தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக காவேரிப்பட்டணம் காவல்நிலையத்தில் இரு தரப்பும் அளித்த புகார் மீது விசாரணை நடந்து வருகிறது.

 

இந்நிலையில், நவ. 30ம் தேதி காலை கேஆர்பி அணை அருகே உள்ள கொல்லாபுரி மாரியம்மன் கோயில் பகுதியில் பழனி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவருடைய மகன்கள் சதீஷ்குமார் (19), இன்னொரு மகனான 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரும் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களை எடுத்து, பழனியை சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பியோடிவிட்டனர்.  இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த பழனி, நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.  

 

இதுகுறித்து தகவல் அறிந்த கேஆர்பி அணை காவல்நிலைய காவல்துறையினர் பழனியின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது ஒருபுறம் இருக்க, கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பழனியின் குடும்பத்தினர், உறவினர்கள் திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதையடுத்து, ஏடிஎஸ்பி சங்கு, டிஎஸ்பி மனோகரன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, கலைந்து சென்றனர்.  

 

இதற்கிடையே, பழனியை கொலை செய்த பாலகிருஷ்ணன், அவருடைய இரு மகன்களையும் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் மூவரையும் சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்