Skip to main content

கலெக்டருக்கு மணியார்டர் மூலம் லஞ்சம் அனுப்பிய துணிச்சல் பெண்!

Published on 17/06/2018 | Edited on 17/06/2018
vp

 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனுக்கு 2100 ரூபாய் லஞ்சமாக, ஊழியர்களுக்கும் பிரித்து தரச்சொல்லி மணியார்டர் மூலம் பணம் அனுப்பியுள்ளார் உளுந்தூர்பேட்டை தாலுக்காவில் உள்ள திருநாவலூர் சுதா என்ற பெண். இந்த செய்தி வருவாய்த்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அந்த பணத்தோடு அதற்கான காரணத்தையும் இரண்டரை பக்கமுள்ள புகாரையும் அனுப்பியுள்ளார் சுதா. ஏன் என்ன காரணம் என சுதாவிடம் கேட்டோம்.

  எனது அப்பா தொப்பையன், அம்மா குப்பம்மாள். நான் உள்பட 4 பெண் குழந்தைகள். அப்பா கடந்த 30.08.2016ல் இறந்துபோனார். அவரது இறப்புக்கு சான்று கேட்டு விண்ணப்பித்தோம். இறப்பு சான்று கொடுக்காமல் அலைக்கழித்தனர். அதயைடுத்து குடும்ப தலைவர் இறந்தால் ஈமச்சடங்கு நிதியாக அரசு 12,500 ரூபாய் வழங்கும். அதை பெற எனது தாயார் பெயரில் மனு அளித்தோம். இறப்பு சான்று உதவி தொகை பெற வேண்டுமானால் 3000 ரூபாய் மொத்தமாக கொடுங்கள் என்று லஞ்சம் கேட்டு பேரம் பேசினார் கிராம உதவியாளர் பலராமன். எழுத படிக்க தெரியாதவர் என் தாயார். வறுமையில் உள்ளது எங்கள் குடும்பம். 3000 ரூபாய்க்கு எங்கே போவோம். தர வசதியில்லை என்று மன்றாடினோம் பணம் தந்தால் உதவித்தொகை இல்லையேல் நடைறை கட்டு என்று துரத்திவிட்டனர்.

 

மாவட்ட ஆட்சியருக்கு இதுபற்றி புகார் எழுதினோம். பதில் இல்லை. தகவல் பெறும் உரிமைபடி தகவல் கேட்ட பிறகு 1.9.2016ல் எனது அப்பா இறப்பு சான்று மட்டும் அனுப்பினார்கள். அதை இணைத்து ஈமச்சடங்க உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தோம். தாசில்தாரிடம் 7.11.2016ல் சமூக நல தாசில்தார் சபாபதி, உங்கள் மனு விசாரணையில் உள்ளது என்றார்.

 

  பலமுறை நடையாய் நடந்தோம். அப்போதும் கிராம உதவியாளர் பலராமன் 3 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் உதவிப்பணம் வரும் இல்லையேல் வராது. இந்த பணம் எனக்கு மட்டுமல்ல தாசில்தார் சபாபதி, ஆய்வாளர் பாஸ்கரன், கிராம அதிகாரி மகாலிங்கம் என பலருக்கும் பங்குபோட்டு கொடுக்க வேண்டும். எனவே பணத்திற்கு ஏற்பாடு செய். இல்லையேல் எந்த அதிகாரிக்கு புகார் கொடுத்தாலும் ஒன்றும் நடக்காது. எங்களிடம் வந்துதான் ஆகணும் என கறாராக பேசினார்.

 

மாதங்கள் கடந்தன. மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் எழுதினோம். அரசு நிதி ஒதுக்கியவுடன் சீனியாரிட்டி அடிப்படையில் உங்களுக்கு உதவித் தொகை கிடைக்கும் என்று பதில் வந்தது. அதன் பிறகு எனது தகப்பனாருக்கு பிறகு இறந்தபோன பலருக்கும் உளுந்தூர்பேட்டை தாசில்தார் அலுவலகம் உதவிதொகை கொடுத்துள்ளது. எங்களுக்கு மட்டும் தரவே இல்லை. காரணம் பாழாப்போன லஞ்சம். எனவேதான் இவர்களை லஞ்ச வெறித்தனத்தை மாவட்ட ஆட்சியர் மூலம் தெரிந்து கொள்ளட்டும் என்று எங்களால் முடிந்த 2100 ரூபாயை கடன் வாங்கி அனுப்பியுள்ளோம். அதை அவர் தாசில்தார், ஆய்வாளர், கிராம அதிகாரி, கிராம உதவியாளர் என அனைவருக்கும் பிரித்து கொடுத்த பிறகாவது எங்களுக்கு உதவி தொகை வருமா என்று பார்ப்போம் என்கிறார் சுதா.

 

அரசு திட்டங்களில் உதவிகள் பெற மேலே இருந்து கீழே வரை லஞ்சம். அதிலும் திருமண உதவி பெற்று பெண்கள் தாலியேறவும் லஞ்சம். கணவர்களை இழந்த பெண்கள் தாலி அறுக்கும்போதும் லஞ்சம். இந்த ஈவு இரக்கமற்ற அரசு ஊழியர்கள் என்ற பெயரில் பணவெறிபிடித்த, அதுவும் லஞ்ச அரக்கணுக்கு எப்படி யார் தண்டனை கொடுப்பார்கள். எங்களைப் போன்ற ஏழைகள் பாடு அரசுக்கு எப்போது புரியும் ’’என்கிறார் சுதா கோபமும், வெறுப்புமாக.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.