Skip to main content

முடிவுக்கு வந்த மூன்று வருடக் காதல்; இளம்பெண்ணைக் கொடூரமாகக் கொன்ற காதலன்

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

boy friend who incident a young woman

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் சத்யஸ்ரீ. 21 வயதான இவர், திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷனிஸ்டாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், சத்யஸ்ரீக்கும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியைச் சேர்ந்த நரேந்திரன் என்ற 25 வயது இளைஞருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அன்றைய நாள் முதல் இவர்கள் இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர். அப்போது, இவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போக, நாளுக்கு நாள் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், ஒருகட்டத்தில் காதலாக மாறியுள்ளது.

 

இதையடுத்து, நரேந்திரனும் சத்யஸ்ரீயும் அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பேசி வந்துள்ளனர். இதற்கிடையில், இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இவர்களது காதலில், காலப்போக்கில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. அதில், நரேந்திரனுக்கும் சத்யஸ்ரீக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போதெல்லாம் தெரிந்தவர்கள், நண்பர்கள் என நரேந்திரன் சத்யஸ்ரீயின் சண்டையை தீர்த்து வைப்பது வழக்கம். இருந்தபோதிலும், இவர்களுடைய 3 ஆண்டுகால பழக்கத்தில் பல்வேறு முட்டல் மோதல்கள் நீடித்து வந்துள்ளது. இத்தகைய சூழலில், கடந்த சில நாட்களாக நரேந்திரனுக்கும் சத்யஸ்ரீக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் உச்சத்தை எட்டியுள்ளது. ஒருகட்டத்தில், சத்யஸ்ரீ நரேந்திரனுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார். 

 

இதனால் விரக்தியடைந்த நரேந்திரன், சத்யஸ்ரீ செல்லும் இடமெல்லாம் அவரைப் பின்தொடர்ந்து டார்ச்சர் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சத்யஸ்ரீ அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையில், நரேந்திரனுக்கு தன் காதலியான சத்யஸ்ரீ மீது ஏற்பட்டிருந்த கோபம், ஒருகட்டத்தில் கொலை வெறியாக மாறியது. அதன்படி, கடந்த 1 ஆம் தேதி காலை 9 மணியளவில், சத்யஸ்ரீ வழக்கம்போல் கிளம்பி வேலைக்கு வந்துள்ளார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த நரேந்திரன் தன்னைக் காதலிக்கும்படி மீண்டும் கூறியுள்ளார்.

 

அந்த சமயம், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, சத்யஸ்ரீயும் தான் வேலை செய்யும் மருத்துவமனைக்குள் சென்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு, மருத்துவமனைக்குள் புகுந்து சத்யஸ்ரீ கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதையடுத்து, படுகாயமடைந்த சத்யஸ்ரீ சம்பவ இடத்திலேயே சரிந்து கீழே விழுந்தார். இதற்கிடையில், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்ட நேரத்தில், நரேந்திரன் தான் வைத்திருந்த கத்தியால் தன்னைத் தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

 

அப்போது, அங்கிருந்தவர்கள் சத்யஸ்ரீயை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, சத்யஸ்ரீயை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். மேலும், இதைக் கேட்ட சத்யஸ்ரீயின் பெற்றோர் கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். தனது மகள் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அலறித் துடித்தனர். இதற்கிடையில், உயிருக்குப் போராடிய நரேந்திரனை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு போலீசார் கொலை செய்யப்பட்ட சத்யஸ்ரீயின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். அதே நேரம், குற்றச் செயலில் ஈடுபட்ட நரேந்திரன் கழுத்தை அறுத்துக் கொண்டதால் அவரால் தற்போது பேச முடியவில்லை. அவர் பேசினால் தான் இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் குறித்து முழுத் தகவலைப் பெற முடியும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த கொலை சம்பவத்தில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தற்போது, தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து காதலியை கழுத்தை அறுத்துக் கொன்று காதலனும்  தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.