Skip to main content

அண்ணாமலைக்கு வைத்த பேனரில் ஏற்பட்ட தகராறு;கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நிர்வாகிகளுக்கு தடை!    

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

BJP puthokataai issue

 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வைரிவயலைச் சேர்ந்தவர் கவிதா ஸ்ரீகாந்த். பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிரணி செயலாளராக இருந்த இவர் மாநில மகளிரணி பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து புதிய பொறுப்பு வழங்கிய மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அறந்தாங்கி நகரில் 6 இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளார். இந்த பேனரில் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மற்றும் அறந்தாங்கி நகரத் தலைவர் படம் இடம் பெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அறந்தாங்கி நகர பாஜக தலைவர் ரமேஷ், தனது ஆதரவாளர்களுடன் மாநில மகளிரணி பொதுச் செயலாளர் கவிதாஸ்ரீகாந்த் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றியுள்ளார்.


இந்தத் தகவல் அறிந்து வந்த பாஜக மாநில மகளிரணி பொதுச் செயலாளர் கவிதா, அவரது கணவர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பெட்ரோல் பங்க் அருகே வைத்திருந்த பிளக்ஸ் பேனரை ரமேஷ் அகற்றிக் கொண்டிருந்த போது அவரிடம் ஏன் பிளக்ஸ் பேனரை அகற்றுகிறீர்கள் எனக் கேட்டுள்ளனர். அதற்கு ரமேஷ் பேனரில் மாவட்டச் செயலாளர் மற்றும் நகரத் தலைவர் படம் இல்லாமல் இருந்தது. அதனால் தான் அகற்றுகிறோம் எனக் கூறியுள்ளார்.

 

நீ யாரு பேனரை அகற்ற என்று ஸ்ரீகாந்த் கேட்க, நான் நகரம்டா என்று ரமேஷ் சொல்ல நான் மாநிலம்டா என்று ஸ்ரீகாந்த் சொல்லிக் கொண்டே தான் வைத்திருந்த பைக் சாவியால் ரமேஷ் முகத்தில் குத்தினார். இதில் காயமடைந்த ரமேஷ் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்நிலையத்தில் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் அவரைத் தாக்கியதாக பாஜக மாநில மகளிரணி பொதுச் செயலாளர் கவிதா, அவரது கணவர் ஸ்ரீகாந்த், இளங்கோவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


இதைப்போல நகரத்தலைவர் ரமேஷ் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக ஸ்ரீகாந்த் கொடுத்த புகாரின் பேரில் நகரத் தலைவர் ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 
பாஜகவினர் இடையே நடைபெற்ற இந்த மோதல் குறித்த வீடியோ, சமுக வலைதளத்தில் வைரலாகியது. அறந்தாங்கியில் பிளக்ஸ் பேனர் வைத்தது தொடர்பாக பாஜகவினரிடையே நடந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் பாஜக புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் செல்வம் அழகப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பொதுவெளியில் நம் கட்சி நிர்வாகிகள் தாக்கிக் கொண்டது கட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கட்சி நிர்வாகிகள் பேனர்கள் வைத்தால் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதுடன் ஒன்றிய தலைமை இடம்பெற வைக்க வேண்டும்.


 
இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற மாவட்டத் தலைவரை கவிதா ஸ்ரீ காந்த் தனது அடியாட்களைக் கொண்டு முற்றுகையிட்டு கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதற்காக இருவரும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம். மேலும் இருவரையும் முன்னிறுத்தும் வகையில் நமது கட்சியினர் பேனர்கள் வைக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.