Skip to main content

அடுத்தடுத்து நடந்த கொடூர விபத்து; ஒருவர் மரணம், 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
back-to-back car accident near Ambur

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து ஏலகிரி நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலி மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த ஏலகிரி பகுதியைச் சேர்ந்த திலகம்(60) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது கணவர் வெங்கட்ராமன்(67) மற்றும் மகன் பிரகதீஸ்வரன்(35) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைப் பின் தொடர்ந்து வந்த தனியார் பேருந்து சாலையில் நின்றதால் அதனைக் கவனிக்காமல் பெங்களூரில் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொள்ள சென்ற மற்றொரு தனியார் மினி வேன், ஆம்னி பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் மினி வேனில் பயணம் செய்த 8 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனம் அணிவகுத்து நின்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஆம்பூர் கிராமிய போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறயினர் போக்குவரத்தை சீர் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் கார் விபத்தில் இறந்த திலகம் உடலை காவல்துறையினர் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 7 ஏழு பேருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு. மேல் சிகிச்சைக்காக வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்