![Awareness Marathon in chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/aTI4A4b_vUm_xF3UqE6e5Clg9hAYUCxLPHx4ThCecgg/1739179486/sites/default/files/inline-images/Marathan.jpg)
இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு விளையாட்டுத் துறை மீது ஆர்வம் குறைவதை தடுத்து, விளையாட்டுத்துறையில் சாதனை புரிய ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக, அரசு சார்பிலும் தன்னார்வல அமைப்பு சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதே வேளையில், இன்றைய தலைமுறை இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பழக்கங்களுக்கு அடிமையாகி சிறு வயதிலேயே உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இதனிடையே, போதைப் பொருள் இல்லாத எதிர்காலத்தை உருவாக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 9ஆம் தேதியன்று சென்னை பெசன்ட் நகரில் போதைப் பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. பொதுமக்களிடையே போதைப் பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஸ்ரீ நாராயண குருவின் போதனைகளையும் கொள்கைகளையும் பரப்பும் விதமாகவும் இந்த போட்டி நடத்தப்பட்டது.
சிம்ஸ் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் 3 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் என்ற மூன்று பிரிவுகளில் 8 வயதை தாண்டிய சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். SN RUN MARATHON என்ற பெயரில் நடைபெற்ற இந்த போட்டியை.. SREE GOKULAM COMPANIES, NAKKHEERN, VINAYAKA RESEARCH FOUNDATION, FOAMS INDIA உள்ளிட்டோர் இணைந்து நடத்தினர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்தார்.