Skip to main content

கல்வி, வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் செல்வோர் கவனத்திற்கு!

Published on 14/12/2023 | Edited on 15/12/2023
Attention those who go abroad for education and employment

வெளிநாடுகளுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகச் செல்லும் தமிழர்கள் நலன் கருதி இராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை, விழுப்புரம் மாவட்டங்களில் முன் பயண புத்தாக்கப் பயிற்சி மையம் அமைத்துத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “வணிகம், வியாபாரம், கல்வி போன்ற காரணங்களுக்காகத் தமிழர்கள் தொன்றுதொட்டு வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு சூழ்நிலைகளால் சில நேரங்களில் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அயல்நாடுகளுக்கு பணிக்குச் செல்லும் தமிழர்களுக்கு உறுதியளித்தபடி வேலை, வேலை நேரம், ஊதியம், உணவு, உறைவிடம், போன்ற பல்வேறு விசயங்கள் தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையைத் தொடர்பு கொள்கின்றனர்.

அவ்வாறு அயலகத் தமிழர்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகள் அயலகத் தமிழர் நலத்துறை மூலமாக அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தமிழ்ச் சங்கங்கள் உதவியுடன் தீர்வு காணப்பட்டு வருகின்றன. இதுபோன்ற குறைகளைச் சரிசெய்யக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகத் தமிழர்கள் புலம்பெயரும்போது, அவர்கள் செல்லும் நாட்டின் சட்ட திட்டங்கள், கலாச்சாரம், மொழி மற்றும் வேலை தொடர்பான குறைந்தபட்ச முன் தயாரிப்புடன் செல்ல ஏதுவாக ஏற்கனவே சென்னையில் முன் பயணப் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காகத் தமிழ் நாட்டிலிருந்து செல்லும் இளைஞர்கள் இது குறித்து போதிய முன் அனுபவமோ போதிய தகவல்களோ இல்லாமல் செல்லும் நிலையே உள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு பெறத் தேவையான முன்பயண புத்தாக்க பயிற்சி பெற நீண்ட தூரம் பயணித்தும், கூடுதல் செலவு செய்தும் சென்னைக்கு வர வேண்டிய நிலையே உள்ளது. அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் அவரவர் வசிக்கும் பகுதியிலேயே வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம். இந்த அடிப்படையில் 'முன்பயண புத்தாக்கப் பயிற்சி மையம்' சென்னை மட்டுமின்றி வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காகச் செல்பவர்கள் அதிகம் உள்ள இராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களிலும் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பினை நடைமுறைப்படுத்திடும் வகையில் ரூ.54 லட்சத்து 75 ஆயிரம் செலவில் முன்பயண புத்தாக்கப் பயிற்சி மையங்கள் அமைத்து தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த முன் பயண புத்தாக்கப் பயிற்சி மையத்தில், வேலைத்தேடி வெளிநாட்டிற்குச் செல்லும் அனைவருக்குமான முன் பயண புத்தாக்க பயிற்சி, கட்டடத் தொழிலாளர், ஓட்டுநர், எலக்ட்ரீசியன் மற்றும் வீட்டு வேலை போன்ற பணிகளுக்காகச் செல்பவர்களுக்கு இப்பணிகளுக்கான அடிப்படைத் தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பான தெளிவுகள் ஏற்படுத்துதல். ஆங்கிலம் மற்றும் அரபு மொழி தொடர்பான அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்த பயிற்சிகளுடன் தேவைக்கேற்ப வீட்டு உபயோக மின் சாதனப் பொருட்களைக் கையாளுதல் போன்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்