Skip to main content

துணை சபாநாயகர் மற்றும் பெண் எம்.எல்.ஏ. கார்கள் உடைப்பு

Published on 18/01/2019 | Edited on 18/01/2019
Attack on the car



புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் விஜயவேணி. இவரது சொந்த ஊர் பாகூர் அருகே உள்ள மணமேடு கிராமமாகும்.  இங்கு நேற்று முன்நாள்  நடந்த பொங்கல் விழாவில் விஜயவேணி கலந்துகொண்டார். விழாவின் போது அவரது கார் அலங்கரிக்கப்பட்டு கிராமத்தில் வலம் வந்தது. அதில் எம்.எல்.ஏ. குடும்பத்தினர் இருந்தனர். காரை அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (வயது 40) என்பவர் ஓட்டினார்.

 

Attack on the car


 

விழா முடிந்து மணமேடு சாலையில் கார் சென்றபோது அங்கு  இடையூறாக மினிவேன் ஒன்று நின்றது. அதை ஒதுங்கி நிறுத்து மாறு கார் டிரைவர் மணிவண்ணன் கூறினார்.  அதனால் மினி வேனில் இருந்தவர்களுக்கும், மணிவண்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் குணசீலன் (வயது 48) என்பவரின் வீட்டில் இருந்து வந்த மர்மநபர்கள் திடீரென்று மணிவண்ணனை திட்டி தாக்கியுள்ளனர். அந்த தகராறின்போது எம்.எல்.ஏ. காரின் பின்பக்க கண்ணாடி கல்வீசி தாக்கப்பட்டதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.  அதை அறிந்த விஜயவேணி எம்.எல்.ஏ, அவரது கணவர் வெங்கடேசன் மற்றும் ஆதரவாளர்கள் குணசீலன் வீட்டின் முன்பு திரண்டனர்.
 

தகவல் அறிந்து அங்கு வந்த பாகூர்- கரையாம்புத்தூர் போலீசாரிடம் எம்.எல்.ஏ தரப்பினர் குணசீலன் ஆட்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக காரை உடைத்து தகராறு செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினர். அதையடுத்து காவல்துறையினருக்கும், எம்.எல்.ஏ ஆதரவாளர்களுக்கும் வாகுவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் குணசீலன் தரப்பை சேர்ந்த சிலரை கைது செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குணசீலன் தரப்பினர் வாக்குவாதம் செய்தனர். அதனால் பாகூர் சுற்றுவட்டார பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 

இந்நிலையில் புதுச்சேரி மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகரும், லாஸ்பேட்டை எம்.எல்.ஏவுமான சிவக்கொழுந்து தனது லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஆனந்தா நகர் பகுதியில் நேற்று நடைபெற்ற பொங்கல் பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள அரசு சார்பில் வழங்கப்பட்ட காரில் சென்றார். நிகழ்ச்சி நடைபெற்ற மேடையில் துணை சபாநாயகர் கலந்துகொண்ட பரிசு வழங்கும்போது, விழா மேடை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காரை ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் உடைத்து விட்டு தப்பியோடினர்.
 

கார் கண்ணாடி உடைக்கப்பட்டது அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து கேட்டறிந்தார் மேலும் லாஸ்பேட்டை போலீசாரிடம் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார்.
 

ஆளும் காங்கிரஸ் கட்சியின் சபாநாயகர் மற்றும் பெண் எம்.எல்.ஏவின் கார்கள் அடுத்தடுத்து 24 மணி நேரத்திற்குள் உடைக்கப்பட்ட சம்பவங்கள் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.

Next Story

'அப்பாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' - விஜய் வசந்த் நம்பிக்கை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'I will win by a bigger margin than my father' - Vijay Vasant Hope

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இன்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரியில் போட்டியிடும் விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''நான் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட என்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறேன். மீண்டும் வெற்றிபெற்று என்னுடைய மக்கள் பணியை மீண்டும் தொடருவேன் என்று நம்பிக்கையோடு இந்த பயணத்தை தொடர்கிறேன். தேர்தலைப் பொறுத்தவரை 2019ல் எனது தந்தை அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த 2024 தேர்தலில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

2024 பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை கன்னியாகுமரி என்பது இயற்கை வளம் சார்ந்த பகுதி. குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும். இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்த தொகுதியில் நான் எதுவுமே செய்யவில்லை என்று சொல்பவர்கள் ஏதாவது செய்திருக்கிறார்களா? இந்த தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளில் என்னால் முடிந்த அளவுக்கு செய்து கொண்டு வந்திருக்கிறேன். மெதுவாக நடந்து கொண்டிருந்த ரயில்வே ரெட்டிப்பு பாதையை வேகப்படுத்தியிருக்கிறோம். இப்படி பல விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அரசியல் காரணத்திற்காகவும், தேர்தல் நேரம் என்பதாலும் இப்படி குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்'' என்றார்.