Skip to main content

‘அத்திக்கடவு அவினாசி திட்டம்’ - முதல்வர் தொடங்கி வைத்தார்!

Published on 17/08/2024 | Edited on 17/08/2024
Athikadavu Avinasi Project CM launched

தமிழக அரசின் சார்பில் ரூபாய் 1914.41 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள அத்திக்கடவு அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் இன்று (17.08.2024) திறந்து வைத்தார். இத்திட்டம் கடந்த 50 ஆண்டுகளாக ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மக்களின் கனவாக இருந்தது.

இதுகுறித்து வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறுகையில், “இத்திட்டத்திற்கு வித்திட்டவர் முன்னாள் முதல்வர் கலைஞர் ஆவார். அதன் பிறகு பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்கள் விவசாயிகள் திட்டத்தை நிறைவேற்றக் கோரிக்கை விடுத்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் பவானி அடுத்த காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் இருந்து உபரி நீரை பம்ப் செய்ய மூன்று மோட்டார் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தவில்லை. இதனால் பைப்லைன் போடப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டத்தை விரைவுபடுத்த உத்தரவிட்டார்.

Athikadavu Avinasi Project CM launched
கோப்புப்படம்

அதன் அடிப்படையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மூன்று முதல் மோட்டார் பம்ப் ஹவுஸ் பகுதிகளில் இடம் வாங்கப்பட்டது. அதன் பிறகு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுக் கடந்த ஜனவரி 2023 இல் முடிவடைந்தது. ஆனால் பவானி ஆற்றில் உபரி நீர் வரவில்லை. தற்போது பவானி ஆற்றில் உபரி நீர் வருகிறது நேற்று (16.08.2024) ஆயிரம் கன அடி வந்தது. இன்று அது குறைந்து காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் கால்வாய்  இருந்து 1.5 டிஎம்சி மொத்தம் உள்ள ஆறு நீரேற்று நிலையங்கள் மூலம் மூலம் ஈரோடு திருப்பூர் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள 1045 குளங்களுக்கும் அனுப்பப்படும்.

முக்கிய பைப் லைன் எட்டு அடி விட்டம் உள்ளது. அது 105 கிலோமீட்டர் உள்ளது. இதைத் தவிரக் குளங்களுக்குச் செல்லும் பீடர் லைன் சுமார் ஆயிரத்து 65 கிலோ மீட்டர் உள்ளது. அதனைச் சோதனை செய்தபோது சில இடங்களில் பழுதடைந்து இருந்தது. அதை எல்லாம் சரி செய்தோம். கீழ்பவானி பாசன கால்வாய்க்கு 15ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிலிருந்து வரும் கசிவு நீர் பத்து அல்லது பதினைந்து நாட்களுக்குள் காலிங்கராயன் அணைக்கட்டுப் பகுதிக்கு வந்துவிடும். இதைத் தவிரப் பவானி ஆற்றில் பெய்த மழையால் தற்போது அணைக்கட்டு பகுதிக்கு உபரி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தற்போது இங்கிருந்து நீர் 1045 குளங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

Athikadavu Avinasi Project CM launched

மொத்தமுள்ள 1045 குளங்களில் 1020 குளங்களுக்கு நீர் சென்றுவிடும். ஒரு சில இடங்களில் பைப் லைனில் பழுது உள்ளதால் அங்குத் தண்ணீர் செல்லவில்லை. அதுவும் சரி செய்யப்பட்டு விடும். கீழ் பவானி கால்வாயில் இருந்து பத்து அல்லது 15 தினங்களில் உபரி நீர் அணைக்கட்டு பகுதிக்கு வந்துவிடும். அதன் பிறகு தொடர்ந்து 70 நாட்களுக்கு இங்கிருந்து 1.5 டிஎம்சி நீர் 1045 குளங்களிலும் நிரப்பப்படும் பாஜக தலைவர் ஏன் இந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை என்று கேட்டுள்ளார். உபரி நீர் தற்போது தான் வந்துள்ளது. அதனால் தான் திட்டத்தை இப்போது துவக்கி வைத்துள்ளோம்.

உபரி நீர் அணைக்கட்டு பகுதிக்கு வராமல் இருந்தால் இத்திட்டத்தைத் துவக்கி வைத்து குளங்களுக்கு நீர் அனுப்ப முடியாது. இதனால் தடை ஏற்பட்டிருக்கும். அப்போது அரசை அவர் குறை சொல்வார். எனவே தான் இந்த அரசு கவனமாக உபரி நீர் வந்த பிறகு திட்டத்தைத் துவக்கி வைத்துள்ளது. இந்த அரசுத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். விவசாயிகள் பயனடைய வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டது. விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்ட நிலங்களுக்கு நஷ்ட ஈடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஒரு சிலர் நிலம் தர விருப்பம் இல்லாமல் இருந்தார்கள். அவரிடம் பேசி நிலத்தைப் பயன்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கென்று தனி அரசாணை வெளியிடப்படும். இன்னும் சில தினங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் பணம் வழங்கப்பட்டு விடும். மற்ற திட்டத்தைப் போல் அல்லாமல் இத்திட்டத்தில் நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த நிலத்தில் எந்த கட்டடம் கட்டக்கூடாது பயிர்கள் செய்யக்கூடாது என்று மட்டும் நிபந்தனை விதிக்கப்பட்ட நிலத்தைத் தான் திட்டத்திற்காகப் பயன்படுத்துகிறோம். முழு ஒத்துழைப்பு அளித்த விவசாயிகள் அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தையும் பாராட்டுகிறோம். முழுமையாக பணிகள் முடித்துள்ளது. ஒரு சில பணிகள் பாக்கி உள்ளன. ஒப்பந்ததாரர் லாசன் ட்யூப்ரோ நிறுவனம் ஐந்தாண்டுகளுக்குத் திட்டத்தைப் பராமரிக்கும் பணியையும் மேற்கொள்ளும். சில குளங்கள் விடுபட்டுள்ளன. அந்த குளங்களுக்குத் திட்டத்தின் மூலம் நீர் வழங்கும் வாய்ப்பு இல்லை. இப்போது வரும் நீரைக் கொண்டு 1045 குளங்களுக்கு நீர் நிரப்பப்படும். விடுபட்ட குளங்களுக்கு என்றால் தனியாகத் திட்டம் போட வேண்டும்" என்றார். அப்போது செய்தித்துறை அமைச்சர்  சாமிநாதன் கலெக்டர்கள் ராஜகோபால், கிரந்திக்குமார் பாடி, கிறிஸ்துராஜ் மற்றும் ஈரோடு திமுக எம்.பி. பிரகாஷ் எம்எல்ஏக்கள் ஏஜி வெங்கடாசலம், சரஸ்வதி, மேயர் சுப்பிரமணியம் மற்றும் பல அதிகாரிகள் உடன் இருந்தனர். 

சார்ந்த செய்திகள்