![Arrested two people who had a dispute over eating at a hotel and not paying](http://image.nakkheeran.in/cdn/farfuture/T0bWpnT-QCswizy90a61LpxB4hPItGyl3esPGT-tyQ4/1696593685/sites/default/files/inline-images/164_44.jpg)
தாம்பரம் ஜிஎஸ்டி சாலை கடப்பேரி பகுதியில் இயங்கி வரும் தனியார் ஹோட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்த இரண்டு நபர்கள், பிரியாணி சாப்பிட்டுவிட்டு அதற்குப் பணம் தராமல் சென்றுள்ளனர். இதனையடுத்து, சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கொடுக்க வேண்டும் என ஹோட்டலில் இருந்த சங்கர் அவர்களிடம் கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சங்கரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்ற இருவரும் சிறிது நேரத்தில் மீண்டும் ஹோட்டலுக்கு வந்தனர். அவர்கள் ஆட்டோவில் வேறு சிலரையும் உடன் அழைத்து வந்திருந்த நிலையில், ஹோட்டலில் இருந்த நாற்காலிகள் மற்றும் பொருட்களைச் சேதப்படுத்தியதுடன், சங்கரையும் தாக்கி விட்டுத் தப்பித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சங்கர் தாம்பரம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில், தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில், குற்றப்பிரிவு ஆய்வாளர் சகிலா மற்றும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்துத் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றவர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று தாம்பரம் சானிடோரியம் பகுதியில் தலைமறைவாக இருந்த கருப்பு (எ) வெங்கடேஷ் (26) மற்றும் கடப்பேரி பகுதியில் தலைமறைவாக இருந்த சுரேஷ் (எ) உதயா (24) ஆகியோரைக் கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.