Skip to main content

ஓசூர் ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் அறிவிப்பு

Published on 17/11/2018 | Edited on 17/11/2018
ட்

 

ஓசூரில் நடந்துள்ள ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து எதிர்வரும் 20.11.2018 காலை 10 மணிக்கு தனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

 

இது குறித்து அவர் மேலும் தனத அறிக்கையில்,   ‘’ஓசூருக்கு அருகே உள்ள சூடகொண்டபள்ளியைச் சேர்ந்த நந்தீஸ்-சுவாதி ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட்  மாதத்தில் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தலித் சமூகத்தைச் சார்ந்த இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதற்கு சுவாதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஓசூர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த நந்தீஸ்-சுவாதி ஆகிய இருவரையும் கடந்த பத்தாம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.


இதனிடையே நந்தீஸ் -சுவாதி ஆகியோரின் சடலங்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாண்டியா மாவட்டம் சிவனசமுத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கம்பியால் கைகள் பின்புறமாக வைத்து கட்டப்பட்டுள்ள நிலையில் அந்த சடலங்கள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சுவாதியின் தந்தை மற்றும் சில உறவினர்களைப் போலிஸ் கைது செய்துள்ளது. ஆனால், கொலை நடந்திருப்பதைப் பார்க்கும் போது திட்டமிட்ட முறையில் கூலிப்படையினரின் உதவியோடு இக்கொலை நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. எனவே, இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து வழக்கு முடியும்வரை அவர்களுக்கு ஜாமீன் வழங்காமல் விரைவு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்து அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல்துறையை வலியுறுத்துகிறோம்.

 

தமிழ்நாட்டில் கூலிப்படை கலாச்சாரம் பெருகிவிட்டதாகவும், மகராஷ்டிரா கர்நாடகா முதலான மாநிலங்களில் அதற்கெனக் கடுமையாக சட்டம் இருப்பதைபோல தமிழ்நாட்டிலும் சட்டம் இயற்றப்படவேண்டும் எனவும் சில நாட்களுக்கு  முன்னால்  சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

 

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய குற்றங்களுக்கு சிலர் அரசியல் லாபம் கருதி செய்துவரும் வெறுப்பு பிரச்சாரமே காரணம். அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு இதில் காட்டிவரும் மெத்தனம் அப்படியானவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

 

2016 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் அவர்கள் வழங்கிய தீர்ப்பில் தமிழ்நாட்டில் நடைபெற்ற 47 ஆணவக் கொலைகளை தேதிவாரியாகப் பட்டியலிட்டுக் காட்டியிருந்தார்.  ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஒன்பது கட்டளைகளையும் அவர் பிறப்பித்திருந்தார்.

 

27.03.2018 அன்று அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், “கலப்புமணத் தம்பதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக வரும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்பி, மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட அதிதிராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்கவேண்டும்; இந்த சிறப்புப் பிரிவுகளில் 24 மணி நேர ஹெல்ப்லைன் வசதி இருக்கவேண்டும்; ஆணவக்  குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அதற்கென உருவாக்கப்படும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படவேண்டும்” என உத்தரவிடப்பட்டது.


 
ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த சென்னை உயர்நீதிமன்றமும்,  உச்சநீதிமன்றமும் வழங்கிய வழிகாட்டு  நெறிமுறைகளைத் தமிழக அரசு இதுவரைப் பின்பற்றவில்லை. அது இனிமேலாவது அவற்றைப் பின்பற்ற வேண்டுமெனக்  கேட்டுக்கொள்கிறோம்.

 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகளும் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென்று வேண்டிக்
கேட்டுக்கொள்கிறோம்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.