Skip to main content

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி விருது அறிவிப்பு

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

Announcement of the Dr Kalaignar aaward

 

2007-ல் 30ஆவது சென்னை புத்தகக் காட்சியைத் துவக்கிவைத்த, அன்றைய முதல்வர் கலைஞர், தம் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசியிடம் வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும், ஒரு ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்கக் கூறினார்.


அதற்காக பபாசியால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து, கவிதை, புனைவிலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் எழுதும் சிறந்த 2 பேருக்கும் ஆண்டுதோறும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி விருது மற்றும் ரூ.1 லட்சம் பணமும் அளித்துக் கௌரவித்து வருகிறது. அதன்படி 2007ல் இருந்து இதுவரை 84 எழுத்தாளர்களுக்கு 84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

 

2021 ஆம் ஆண்டுக்கான விருதாளர்களை அதற்காக அமைக்கப்பெற்ற குழு தேர்வு செய்துள்ளது. தேர்வுபெற்ற விருதாளர்கள் பட்டியலை பபாசியின் தலைவர் ஆர்.எஸ் சண்முகம் அறிவித்துள்ளார். கரோனா காரணமாக நடைபெறாமல் நின்றுவிட்ட 2020ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவும் 2021ஆம் ஆண்டுக்கான விழாவுடன் இணைந்து நடைபெறும். விழா குறித்த தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று பபாசி தலைவர் அறிவித்துள்ளார்.

 

2021 ஆம் ஆண்டு விருது பெறும் விருதாளர்கள்; அபி (கவிதை), இராசேந்திர சோழன் (புனைவிலக்கியம்), எஸ்.ராமகிருஷ்ணன் (உரைநடை), வெளி ரங்கராஜன் (நாடகம்) ஆகிய நான்கு பேரும் தமிழ் மொழிக்கான விருதைப் பெறுகின்றனர். 

 

மருதநாயகம், ஆங்கில மொழிக்கான விருதையும், நதித் சாகியா பிற இந்திய மொழியில் காஷ்மீரி மொழிக்கான விருதையும் பெறுகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்