Skip to main content

அண்ணாமலையார் கோவில் ஆயிரம் கால் மண்டபம் திறப்பு - மகிழ்ச்சியில் பக்தர்கள்

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் 24 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் உள்ளே 5 பிரகாரங்களுடன் உள்ள இக்கோவிலின் 5வது பிரகாரத்தில் 142 சன்னதிகள், 306 மண்டபங்கள் உள்ளன. அதில் ஆயிரங்கால்கள் அதாவது ஆயிரம் தூண்கள் கொண்ட மண்டபமும் உள்ளது.

 

இந்த ஆயிரங்கால் மண்டபம் ஆண்டுக்கு இரண்டு முறை ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனத்தின் போது திறக்கப்பட்டு வருகிறது. இது அண்ணாமலையார் பக்தர்களை கவலையில் வைத்திருந்தது. காரணம் ஆயிரங்கால் மண்டபத்தில் கலைநயம் மிக்க சிற்பங்கள் ஒவ்வொரு தூணிலும் உள்ளது. இந்தக் கலைநயம் மிக்க சிற்பங்களை பக்தர்கள் பார்க்க முடியவில்லையே எனக் கவலையில் இருந்தனர்.

 

இந்நிலையில் இந்தாண்டு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் பொதுமக்கள் பார்வையிடத் திறந்து வைக்கப்பட்டது. இரவிலும் பார்க்கும் வண்ணம் வண்ண விளக்குகளால் மண்டபமும், உள்பகுதியிலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. அதோடு 108 சிவதாண்டவ ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பக்தர்களின் பார்வைக்காக முதல் முறையாக ஆயிரங்கால் மண்டபம் திறந்து இருப்பது பக்தர்களுக்கும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தேர் வீதி உலா வரும் மாடவீதியை ஆட்சியர் முருகேஷ், எஸ்.பி கார்த்திகேயன் ஆகியோர் வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர். அதில் மாடவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். அதோடு தேர் தடங்கள் இல்லாமல் வீதி உலா வருவதற்கு எது எது தடையாக இருக்கும் என ஆய்வு செய்து அதனை சரிசெய்ய உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறத் துவங்கியுள்ளது.

 

வரும் நவம்பர் 27 ஆம் தேதி காலை கார்த்திகை தீபத்துக்கான கொடியேற்றம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்