Skip to main content

‘அன்புக்குடில்’ உதவும் கரங்கள் சேவை மையம் தொடக்கம்!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
 Anbukudil uthavum karangal sevai maiyam 

தமிழகத்திலேயே முதல் முறையாக உணவு, உடை, புத்தகம் உள்ளிட்டவைகளை இருப்பவர்கள் கொடுத்து இல்லாதவர்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் அன்புக்குடில் எனும் உதவும் கரங்களின் சேவை மையம் படூர் ஊராட்சியில் துவங்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியில் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் கே.ஏ.எஸ்.சுதாகர் முயற்சியில் தமிழகத்தில் முதல் முறையாக அன்புகுடில் உதவும் கரங்கள் மையத்தை அமைத்துள்ளார். இந்த அன்புகுடில் உதவும் கரங்கள் மையத்தில் உணவு, உடை, புத்தகம், பழ வகைகள், பெண்களுக்கு நாப்கின் உள்ளிட்டவைகளை அவரவர் தேவைக்கேற்றார் போல் எடுத்துச் செல்லும் வகையில் இந்த அன்புக்குடிலை அமைத்துள்ளனர். 

சென்னையை அடுத்து வளர்ந்து வரும் பகுதியாக உள்ள படூர் ஊராட்சியில் பல அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில் துறை நிறுவனங்கள் அமைந்துள்ள நிலையில் இங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகளும் பொதுமக்களும் தங்களுக்குத் தேவை போக மீதமுள்ள உணவு, உடை, புத்தகம், பழம் உள்ளிட்ட பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவும் வகையில் படூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அன்புக்குடில் எனும் உதவும் கரங்களின் சேவை மையத்தை நேற்று ஊராட்சி மன்றத் தலைவர் தாரா மற்றும் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் கே.ஏ.எஸ்.சுதாகர் இருவரும் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.  

படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு தேவையான புத்தக குடில் அமைக்கப்பட்டுள்ளது, அதேபோல் பசி என்று யாரிடமும் கையேந்தும் நிலை இங்கு உருவாக கூடாது என்பதற்காக உணவு குடில், தேவைக்கேற்றார் போல் ஆடை குடில், பெண்களுக்கான நாப்கின் குடில் என ஒரே இடத்தில் மக்கள் பயன்பெறும் வகையும் நான்கு குடில் அமைத்துள்ள மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் சுதாகரின் செயல் அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏழைகளின் நிலை புரிந்து அன்புக்குடில் உதவும் கரங்கள் சேவை மையம் அமைத்து கொடுத்த சுதாகருக்கு பலதரப்பு மக்களிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

 Anbukudil uthavum karangal sevai maiyam 

இதில் பேசிய மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் கே.ஏ.எஸ்.சுதாகர் கூறுகையில் "பொதுமக்கள் தங்களுக்கு தேவை இல்லாத புத்தகங்கள், உணவு பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றை யாருக்கு கொடுப்பது எங்கு சென்று கொடுப்பது எனத் தெரியாமல் வீணடித்து வருகின்றனர். இதனைப் போக்கும் வகையில் தங்களுக்குத் தேவைப்படாத பொருட்களை இந்த மையத்தில் சென்று வைத்து விட்டால் தேவைப்படுவோர் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும் ஒரு ரூபாய் காயின் செலுத்தி பெண்கள் நாப்கின் பெற்றுக் கொள்ளும் வகையில் நாப்கின் இயந்திரமும் அமைக்கப்பட்டுள்ளது. 

உணவு, உடை, புத்தகம், பழ வகைகள் உள்ளிட்டவைகளை இருப்பவர்கள் இல்லாதவர்களைத் தேடி சென்று கொடுப்பதை தவிர்த்து இல்லாதவர்கள் அவர்களுக்கு தேவைக்கேற்றார் போல் யாரிடமும் கேட்காமல் அவர்களுக்கு தேவையானதை இலவசமாக பெற்றுக் கொள்ளும் வகையில் படூர் ஊராட்சியில் அன்புக்குடில் எனும் உதவும் சேவை மையத்தை மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை சார்பில் புதிதாக துவங்கியுள்ளது பாராட்டத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அக்கா வீட்டில் தங்கிய தங்கைக்கு நேர்ந்த சோகம்; போலீசார் விசாரணை!

Published on 21/05/2024 | Edited on 21/05/2024
The tragedy of the younger sister who stayed at the older sister's house

சென்னை சைதாப்பேட்டையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டைச் சேர்ந்த மூதாட்டி செல்லம்மாள் (வயது 62) என்பவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்து நேற்று (20.05.2024) தங்கியுள்ளார். இந்தச் சூழலில் செல்லம்மாள் அக்கா வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மேற்கூரை பூச்சு இன்று (21.05.2024) அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் செல்லமாளை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்லமாள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

‘சென்னையில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் தகவல்!

Published on 21/05/2024 | Edited on 21/05/2024
'Chance of rain in Chennai' - Meteorological Department informs

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தென் மேற்கு வங்கக் கடலில் நாளை (22.05.2024) குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தமிழ்நாட்டில் 23 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் மே 23 ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் இன்று (21.05.2024) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போன்று தென்காசி, தேனி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (22.05.2024) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (21.05.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று (21.05.2024) காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.